செவ்வாய், 30 அக்டோபர், 2012


நேசித்த கவிதையின்

கவிஞனை நேசிப்பது

நேசித்த கவிஞனின்

கவிதையை நேசிப்பது

கவிஞனின் கவிதையை நேசிப்பது

கவிதையின் கவிஞனை நேசிப்பது

சுலபமான காரியங்களில் ஒன்று..

 

சுயவிருப்பத்தை

ஒருதலைக்காதல் போலவும்

கல்கண்டை மெல்லுவது போலவும்

விருப்பத்தை

மறைக்க முயல்வதை

யாரோ அறிந்து கொண்டுவிட்டார்கள்

கவிஞரே…

 

ஒரு சிறுவன்

எளிய ஒரு மண் சக்கரம் வரைந்து

பம்பரங்களை மையத்தில்

சேகரித்து வைத்திருக்கிறான்

 

ஒரு சிறுவன்

சைக்கிள் டயரைப் பற்றவைத்து

நம்மை அணைத்தபடி

நெருப்பைச் சுற்றுகிறான்..

 

நாமிருவரும்

சொற்களைச் சுற்றுவதில்

என்ன தயக்கம் கவிஞரே..

உன் பம்பரத்தின் ஆணி மையத்திற்கு

கோதுமை நாகம் தீண்டிய நஞ்சு எச்சில்

தொட்டு பத்ம வியுகத்தைத் தகர் கவிஞரே…

உன்மைதான் நீ சொன்னது போல

என்னால் மதுக்குவளைகளில்

மதுவை ஊற்றத் தெரிவதில்லை

எப்படியும் இரண்டு சிமிழ்களை சிந்திவிடுகிறேன்…

 

அதனால் வெட்கத்தை விட்டு சொல்கிறேன்…

நேசித்த கவிதையின்

கவிஞனை நேசிப்பது

நேசித்த கவிஞனின்

கவிதையை நேசிப்பது

கவிஞனின் கவிதையை நேசிப்பது

கவிதையின் கவிஞனை நேசிப்பது

சுலபமான காரியங்களில் ஒன்று..

நேசிக்கிறேன்..நேசிப்பேன்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக