புதன், 15 ஏப்ரல், 2015

"min pura kavithaigal"' seeralan kavithaigal-


மின்புறா கவிதைகள்

சீராளன் ஜெயந்தன் கவிதைகள்

தொகுப்பு குறித்து

 

கவிதைகளில் நமக்குச் சௌகரியமான உலகத்தின் கவிதைகள் மற்றும் நமக்கு சௌகரியப்படாத உலகத்தின் கவிதைகள் என்பதாக புதுக்கவிதை உலகம் தனது காலத்தின் அளவளவுகளை தீர்மானித்து இயங்கி வருகிறது. தனிப்பட்ட கவிஞனின் வாழ்வின் நெருக்கடிகள் பணி, பதவி, வீடு பேறு சுகம் உறவு களில் அளப்பரிய வெற்றிகளை ஈடு கொண்டு விடுகிற கவிஞனின் சொற்களுக்கும் வறுமை, போதை, பிரச்சனை, உறவுச்சிக்கல் கொண்ட கவிஞனின் சொற்களும் நம் இலக்கிய வகைகளில் காணக்கிடைக்கிறது. கவிதைகளில் வீசும் நறுமணங்களில் ஓசைமிக்க சந்தங்களிலேயே கவிஞன் சௌகரியமான உலகத்தில் சஞ்சரிக்கிறானா வறுமையில் உழல்கிறானா என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். கவிதை கவிஞன் உறவு சௌகரிமிக்க உலகத்தினாலானது. அதற்கு எதிரானதுமானது.

கவிதை வடிவங்களில் ஒவ்வொரு பதின்பருவங்களிலும் மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கிறது. புதுக்கவிதை வடிவங்களிலிருந்து உரைநடையுடனும் வசன சந்த எதுகைகளுடன் எண்பதுகளின் காலத்தில் எழுதியவர்கள் உண்டு. எண்பதுகளின் காலம் சீர் சிறப்புத் தமிழின் பொற்காலம் எனலாம். எண்பதுகளில்தான் மிக அதிகமான இலக்கியப்படைப்புகள் வணிக இதழ்கள் இலக்கியப் பிரிவுகளுக்கான தனித்த இதழ்கள் வந்து பெரிய வாசகர்களின் பரப்பை உருவாக்கியது.

புதுக்கவிதை வடிவங்கள் மெல்ல தனது பார்வையை அகம் புறம் என்று பகுப்பாய்வு செய்யத் தொடங்கியது முதல் அதன் வடிவ நீட்சி அங்கதமும் சமூக விமர்சனமும் கொண்டதாக மாறியது. இசைப்பாடல்களுக் காக எழுதப்படுகிற கவிதை வடிவ சந்தங்களும் சமூகத் தினைப் பற்றியும் மனிதர்களின் அறியாமையைக் குறித்து ம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. கவிஞர்கள் எல்லாச் சமூக தளங்களிலிருந்தும் தோன்றி வெளியே தெரிய ஆரம்பித்தார்கள். சமூக அடித்தளத்தட்டிலிருந்து எதிர்பார்த் தளவு ஆக்ரோசத்துடன் வரவேண்டிய கவிஞர்களின் கவிதைகளும் கவிதைகளின் கவிஞர்களும் இடஒதுக்கீடு நோக்கியும் மதமாற்றம் இவ்விருநிலைகளின் சார்பு நிலையுடன் கழைக்கூத்தாடியின் கயிற்றுப் பாதைபோல தள்ளாட்டம் காணப்பட்டார்கள். சீராளன் ஜெயந்தன் கவிதைகள் சற்று மாறுபட்டவை. அவருடைய கவிதையின் வடிவங்கள் பல மூத்த ஆளுமைகள் உபயோகப் படுத்தியிருக்கிறார்கள். அபி. ரிஷி எஸ்.வைத்தீஸ்வரன்,அழகிய சிங்கர், அசோகமித்திரன்  எழுதியிருக்கிறார்கள். மிக சாதாரணமாக,மிக எளிமையாக படு சாதாரணமாக எழுதப்படுகிற வரிகள் கவிதைகளின் தரத்தை உயர்த்திருப்பதை நாம் கண்டிருக்கிறோம். கரடு முரடு மிக்க வாழ்க்கை நெருக்கடிகளை நாடோடிகள் தங்கள் பரதேசிப் பாடல்களின் வழியாக போகிற போக்கில் அற்புதமான தத்துவங்களை தெளித்துப் போகிற சித்தர்களின் பாடல்களும் இதே வகைதான்.

நாளை

நாளை வந்தது பிரளயம்

எனப் பயந்தார்

கோயில்களில் ஆறுகால பூஜை

 

கடைக் கோடி மனிதனுக்கோ

வேலையிருக்கு வெட்டி முடிக்க

மின்சார பில் கட்ட...

தொலைபேசி கட்டணம்,

குடும்ப அட்டை மாற்றம்

வாக்காளர் பட்டியல் திருத்தம்

பள்ளியில் பணம் கட்ட

அல்லது ஆசிரியரிடம்

வாங்கிக்கட்ட

வண்டிக்கு முடிந்த காப்பீடு

புதுப்பிக்க

 

படுத்திருக்கும் அப்பனுக்கு

மருந்து வாங்க

பாரியாளுக்கு வாங்கி சேலை மாற்ற

ஆயிரம் வேலையிருக்கு செய்ய

இந்த பூஜைமுடிந்தால் தேவலாம்

நாளை......                        ---பக்-33

 

       வாழ்நாளின் மிக எளிய சம்பவங்களைக் கவிதைகளாக்குவது என்பது தைரிமிக்க விசயம்தான். குடும்ப அமைப்பு முறைகளுக்குள்ளாக சடஙகுகளுக்குள்ளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட கவிஞர்கள் உள்பட நடுத்தர சமூகத்தின் குரல்களாக பல கவிதைகள் அடங்கியிருக்கிறது. பெரும்பாலான கவிஞர்கள் பேச அச்சப்படுகிற ஆபாசமான சொற்களாகவே இந்த குடும்ப அமைப்பு முறைச் சொற்றொடர்கள். சீராளன் பல கவிதைகளிலும் நறுக்குகளிலும் இந்த அங்கத விமர்சனத்தை வைத்திருக்கிறார்.

சமூகம் என்பது இலக்கியம் போன்ற குழப்பம்  மிக்க ஒன்றுதான். சமூகம் வேறு. இலக்கியம் வேறு. இரண்டும் ஒன்றையொன்று என்றும் சாராது இருந்தவை. இரண்டுக்குமிடையே நிலவும் குழப்பங்கள்தான் சமூக வேறுபாடுகளை உருவாக்குகிறது. அதனால்தான் எந்த இனமக்களும் தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் காண்ப்படுகிறார்கள். இனவரையில் இலக்கியம் அல்லது இனவரைவியல் கவிதை என்பது ஒவ்வொரு பதின் பருவ காலங்களிலும் உருவாகியே வந்து கொண்டிருக்கிறது. தன் சமூக இன மக்களுக்காகப் போராடுகிறோம் வாழ்கிறோம் என்று இன்று நம்மிடையே காணப்படுபவர் கள் கூட பெரும் நிலவுடைமையாளர்களாக செல்வந்தர் களாக மதபீட நிறுவனர்களாக நூறு இருநூறு கார்களில் நீதிமன்றங்களுக்கு அலைகிறவர்களாக, மருத்துவ மனைகளில் தஞ்சம் புகுந்து கொள்கிறவர்களாகவே காணப்படுகிறார்கள்.

சமூகம் சார்ந்து அகம் புறம் சுகம் ஒழுக்கம் மதிப்பீடுகளை காலந்தோறும் கவிதையும் இலக்கியமும் விமர்சித்து வந்து கொண்டிருக்கிறது. கவிதையால் எதையும் விமர்சனம் செய்து விடமுடியும். கவிதை செத்து சமூக விமர்சனம் மேலோங்குகிறது. பெரும் பாலும் புதுக்கவிதை வடிவத்திற்குப் பிறகு வளர்ந்த கவிதை இயக்கம் இந்த சமூகத்தின் மீதான வெளிப்படை யான விமர்சனத்தை வைத்துக் கொண்டே வருகிறது. நம் சமூகத்தின் படித்தவர்கள்,படிக்காதவர்கள்,வறிய நிலையி லிருப்பவர்கள்,ஏழ்மையர்,நடுத்தரவர்க்கம், தொழிலாளி வர்க்கம், உள்பட எல்லா நிலைக் கவிதைகளும் சமூகத் தை விமர்ச்சிக்கிறது. அது சமூக விமர்சனம்தான் என்ப தை அந்தக் கவிஞரையே ஒப்புக்கொள்ளவைக்கத்தான் இலக்கிய விமர்சனம் என்பது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நான் அப்படிஎழுதவில்லை என்பதும் அதுவல்ல பொருள் என்று பல்டி அடிக்கிறவர்களை ஆமாம் அதுவே பொருள் என்றுணர்த்தப் போராடுற பணியையும் கவிதையின் வாசகனும் விமர்சகனும் காலந்தோறும் செய்து கொண்டேயிருக்கிறான்.

புத்தாண்டு

ஏய் மனிதா

நீ போட்ட கோட்டில்

உன் கட்டத்தில்

போதவில்லை என்று

புதிது மாற்றினாய்

நாட்காட்டியை

 

நான் சுற்றிய படி

சுற்றித் தானிருக்கிறேன்

எங்கு தொடங்கினேன்

எங்கு முடிவேன்

தெரியாது

 

இருளும் ஒளியுமே

மாற்றம்

 

நேற்று கழிந்தது

மகிழ்வென்றால்

இன்று பிறந்தது

கவலையாயின்

ஏனிந்த ஆர்ப்பரிப்பு

 

உன் நாட்காட்டி மாறுவதில்

மாற்றம் ஏதுமில்லை

வாழ்வில் வேறு புள்ளிகள் வை

கொண்டாட..

 

சமீபத்தில் வாசித்த கவிதைகளில் முக்கியமான கவிதை தொகுப்பாக சீராளன் ஜெயந்தனின் “மின்புறா கவிதைகள்“ நூலில் கண்டேன். கவிதைகளின் பலவகைகளைக் காண முடிந்தது. பல வடிவங்கள், காலத்தின் அளவீடுகளை நுணுகி ஆராய்ந்து விமர்சிக்கிற கவிதைகளாக பல இருக்கிறது. புதுக்கவிதையின் ஆக்கங்களாக சிலதும் குறும்பாக்களாக,நறுக்குகளாக என்று எல்லாவகையான சிந்தனைத்துளிகளாக அமைந்திருக்கிறது. பெரும்பாலும் நடுத்தவர்க்கத்து மனதில் இயலாமைகள் போதாக்குறை கள் சாமாத்தியமற்ற பொழுது சடங்குகள் பற்றிய மனக்கு றைகள் என்பதாக பல கவிதைகள். இந்தக்கவிதைகள் எதுவுமற்ற இயலாத நிலை கொண்ட மனித மனதின் அகப்பாடல்களாகவே உள்ளது. வெளிப்படுத்துகிற தன்மை யதார்த்தமாக உள்ளது. கவிஞனால் வேறென்ன செய்ய முடியும். அறிந்த மொழியை வைத்து வெளி உலகத்திற்கு சமூகச் சூழல்களை “ரிர்போர்ட்செய்யத்தான் முடியும். அவனிடம் என்ன அதிகாரங்கள் உள்ளது. அவன் சொன்னால் யார் கேட்பார்கள். சமூக அடுக்குகளில் உள்ள அதிகாரத்தின் ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் கேட்டு உடனே பின்பற்றி நடந்து கொள்ளவா போகிறார்கள்.. நீயென்ன எனக்கு வந்து அறிவுரை சொல்வதற்கு நான் சொல்கிறேன் உனக்கான அறிவுரை என்றுதானே நகரமும் நாடும் நாட்டுமக்களும் ஊர்ந்து போய்க் கொண்டேயிருக்கி றார்கள். சீராளன் கவிதையொன்று

நகரம்

எல்லாம் இருந்தது

நகரத்தில்

நகருக்கு மத்தியில் வீடென்ற

பெருமையும்

 

இறங்கினால் கடைத்தெரு

திரும்பினால் காய்கறிச் சந்தை

சாலையில் பேருந்து

எட்டிப் போட்டால்

ரயில் நிலையம்

சுற்றிச் சுற்றி மருத்துவர்

மாபெரும் மருந்துக்கடைகள்

ஊதிப் பெருத்துவிட்ட

பலசரக்குக் கடைகள்

ஜவுளிக் கடல்கள்

கைதட்டினால் ஆட்டோ

 

என்னைக் கிடத்தியிருந்த

அவசர ஊர்தி அலறியதே தவிர

நகரவில்லை

 

         தொகுப்பிலுள்ள பல எளிமைமிக்க சாதாரணமான வாக்கியங்களில் உள்ள “கருத்து“ கள் ஆச்சர்யம் தருகிறது. கவிதைகள் என்று இவைகளும் அறியப்படுகிற காலமும் தெரிகிறது. நறுக்குகளாக ஐகூ கவிதைகளாக சில பக்கங்களில் உள்ளது. சமூகத்தின் மீது வைக்கிற நடுத்தரவர்க்கத்தின் சத்தமற்ற மிருதங்க குரல். அளவான சத்தம் கொண்ட நாத இசைக்கருவிகளின் பாடல்கள் போன்றும் சில கவிதைகள். பிரமிப்பு கொள்ள வைக்கிற நம் சிந்தனையை கிளறி விடுகிற சுற்றிச் சுற்றி மூளையைக் கசக்க வைக்கிற நுட்பமான வரிகளோ எதுவுமில்லை. இந்தக் கவிதைகளே சீராளன் கவிமொழியின் பலம். இறுதியில் குறுங்காவியம் எனும் நீண்ட கவிதையின் நடை ஆச்சர்யமாக இருக்கிறது. இந்தக் கவிதைகளுடன் இந்தக் காவியம் வேறொரு தளத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்தப் பகுதியில் பயண்படுத்திய கவிதைமொழியும் நடையும் வேறு.

அதில் ஒரு காட்சி

வெப்பம் தணிந்து

கதிரவன்

மேல் மறைகையில்

சிற்பம் சிற்பமாய் சிறக்க

விழி திறக்க

காத்திருக்க

மனம் வெடித்து

வாய் திறந்தான்

சித்திரன்

 

 மரபு, நறுக்கு, ஐகூ, புதுக்கவிதை இப்படியாக வாழ்வின் சித்திரங்களை பல்வேறு எதார்த்தாமான எளிமையான சொல்லாடல்கள் மூலம் சீராளன் தன் அனுபவங்களை விமர்சனங்களை, தன் புரிதல்களை, வியாக்கியானங் களை முன்வைத்துள்ளார். வாழ்நாட்களை நாம் எந்தளவு விமர்சனப் பார்வையுடன் அறிந்து கொள்ள முயற்சிக்கிறோமோ அதே அளவு இலக்கியப் பிரதிகளின் தன்மையையும் அறிந்து கொள்ளலாம். இலக்கியப் பிரதிகள் காலத்தின் ஒவ்வொரு படிமங்களையும் காட்சிகளையும் அறிந்து கொள்ளலாம். கவிதையை மிக சுதந்திரமாக பயண்படுத்தியிருக்கிறார் அவர் தனது கவிதைகளக்கான மொழியென்பது தன் மனதின் இயல்பான கூறல் என முடிவு செய்திருக்கிறார் என்று சொல்லலாம். எந்தப் பின் விமர்சனங்களையும் கண்டு யோசித்து காலம் தாழ்த்தாமல் தனது தொகுப்பை நூலாக்கியிருக்கிறார்.. வாழ்த்துகளுடன்.

வெளியீடு

 

மெய்ப்பொருள்

கவிதைகள்

சீராளன் ஜெயந்தன் ஆசிரியர்

38-22-4 வது பிரதான சாலை

கஸ்தூரிபாய் நகர்

அடையார்-சென்னை 600 020

விலை-ரூ.180

 

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

பாம்பாட்டி சித்தன் கவிதை நூல் அறிமுகம்..



இறந்தவர்களை அலங்கரிப்பவன்

கவிதை நூல் குறித்து

பாம்பாட்டி சித்தனின் மூன்றாவது கவிதை நூல் அறிமுகம்

பாம்பாட்டி சித்தனின் கவிதைகள், ஒரு குழந்தையின் ஆர்வமும் அவதானிப்பும் நிரம்பிய ஒரு விதமான பரிசோதனைகள். தொடர்ச்சியான பல்வேறு பரிசோதனை களின் வாயிலாகத் தங்களுக்கான புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்பவை இதனாலேயே இக்கவிதைகள் எதிர்காலத்திலிருந்து நிகழ் கணத்தில் இயங்கும் தன்மையுடையனவாக இருக்கின்றன. முரண்பாடுகளை அடித்தளமாகக் கொண்டிருக்கும் நவீன உலகம்-மனித வாழ்வு குறித்த வலி மற்றும் பகடியைப் பகிர்ந்துகொண்டவை. மாற்றுத்திறனாளி குழந்தைகளும் எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளும் வலிப்பு நோயுற்ற குழந்தைகளும் இவரது கவிதை உலகினுள் ஊடாடுகின்றனர்.   – பதிப்பாசிரிர் அறிமுகக் குறிப்புகள்   
இலக்கியப் பிரதிகளின் தலையாய பணியே பெற்ற அனுபவங்களிலிருந்து வரப்போகிற அழிவைத் தடுப்பதுதான். உலகத்தில் நெருக்கடிகளும் நெரிசல்களும் அதிகரிக்க அதிரிக்க பிறக்கும் குழந்தைகள் முழுமையடைந்த வளர்ச்சியடைந்த குழந்தைகளாக பிறப்பதில்லை. கருத்துக்கு எதிர்கருத்து என்பது பிறக்கும் என்பது போல மிகச்சரியானதுக்கு எதிராக மிகவும் பிற்போக்குத்தனமான கருத்து உருவாகியே தீரும் என்பது போல விஞ்ஞானத்தின் வளர்ச்சியானது மறுபக்கம் இயற்கை வனப்பு மிக்க உலகத்தை மனதை விஞ்ஞானம் அழித்து வரவே செய்கிறது என்பதை நவீன இலக்கியப் பிரதிகளும் கவிதைகளும் உணர்த்துகிறது.பாம்பாட்டி சித்தனின் மூன்றாவது கவிதை தொகுப்பில் இந்த நேரெதிர் வளர்சிதை மாற்றங்களை அதன் பிரச்சனை களை எதிர்கொள்கிறது. இன்றைய காலச்சூழலில் பெருமளவில் மக்களைத்திரட்டிக் கொண்டு போய் ஒரு அநீதியைத்தட்டிக் கேட்பதற்கான வாய்ப்புகள் அற்றுப் போய்விட்டது. இங்கு மக்களைத் திரட்டுவதற்குப் பதிலாக அவர்களுடைய சிந்தனையை, ரசனையைத்திரட்டும் பணிதான் தற்போது மிகவும் அவசியமாகத் தேவைப் படுகிறது. இலக்கியப் பிரதிகளின் முக்கியமான பணியும் அதுதான். கவிதைகள் மிகவும் அதிகப்படியான பணியைச் செய்கிறது. மக்கள் தங்கள் பிரச்சனைகளின் வழியாகவே காலத்திற்குள் தங்களை தொலைத்துக் கொள்கிறார்கள். அவர்களற்ற சமூகம் பற்றிய அக்கறைக்கு வேலையே இல்லை. இருப்பினும் ஒரு சதா நினைவுட்டல் போன்ற காரியங்களைப் படைப்பிலக்கியவாதிகள் தொடர்ந்து ஈடு படவும் வேண்டியிருக்கிறது.

பதிலீட்டு வினை
ஓர் உயிர் இன்னோர் உயிரை
ஒரு துயரம் வேறொன்றை
ஒரு வலி மற்றொன்றை
ஒரு கண்ணீர்த்துளி
வேறொரு கண்ணீர்த்துளியை
ஒரு தனிமம் இன்னொன்றை
பதிலீடு செய்வதைக் குறித்து
நாம்
இன்னம்கூட அதிகமாகப்
பேசித் தொலைக்கலாம்---பக் 12

       நாம் பேச வேண்டியவைகள் என்னென்ன பாக்கியிருக்கிறது என்பதை நினைவுட்டுகிற கவிதை. நிச்சயமாகப் பேச வேண்டிய இடங்களில் பேசுகிறார்களா என்பதை நாம் யோசிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அல்லது பேசுவதற்கான பிரதிநிதித்துவம் இருக்கிற இடங்களில் பேசுவது நடக்கிறதா. சட்டமன்றங்கள், பாராளுமன்றங்கள் உள்பட மக்களின் பிரதிநிதிகள் தங்கள் மையங்களில் பேசுகிறார்களா. என்றால் அந்த வாய்ப்புகள் மிகமிக குறைவுதான். நம்மில் உரையாடலுக்கு மீறிய உரையாடல்களை நோக்கியே சபைகள் செல்கிறது. ஒரு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் தேவை யென்று ஒருவர் பேசினால்தானே உரிய செவிகளுக்குப் போய்ச் சேர்ந்து மருந்துகள் வந்து சேர்ந்து அந்த நோயாளிகளுக்குப் பயண் விளையும். சமூக உய்வு குறித்துப பேசுதோ, மனித உய்வு குறித்துப் பேசுவதோ கூட தீண்டாமையில் ஒரு வகையென்பதாக அறிவு றுத்தப்படுவதை எதிர்கொண்டிருக்கிறோம். கவிஞனும் கவிதையும் பேசுவதை நாம் குறிப்பிட்டாகவேண்டும்.
புறவகை அழிவுகள் காலத்திற்கு ஏற்றது மாதிரி நிகழ்ந்த படியேதான் இருக்கிறது. புதியன புகுதல் பழைய அழிதல் என்பதல்ல.புதியன புகுதல் மரபுகளை அழித்தல் என்பதுதான் சரி. செல்போன் டவர்கள் கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டது முதல் பறவைகள் இருப்பும் சிறு சிறு பறவைக் குஞ்சுகளின் இனப் பெருக்கம் பாதிக்கப்பட்டது. ஏறக்குறைய சிட்டுக்குருவி களற்ற மருதம் குறிஞ்சி நிலங்கள் மாறிவிட்டது. கனரக காற்றாடிகள் வறண்ட பாலைகளில் வெள்ளரக்கர்கள் போன்று நிறுவப்பட்டு காற்றுகளுக்காகத் தன் இறக்கை களை விரித்தபடி விவசாய நிலங்களைத் தின்று செரிக்கிறது. மனித மரணம் மட்டுமன்றி பொருள் வள ஈட்டல் என்னும் பராகாசூர ஆசைகளால் மண்ணும் மரங்களும் பறவைகளும் ஆறுகளும் வாய்க்கால்களும் கரணைகளும் அழிக்கபட்டாயிற்று. மனிதர்கள் வேலை வாய்ப்புகளற்று பெருநகரத்தின் கட்டிட எலும்புக் கூடுகளுக்குள் வாழப் பழகிக் கொண்டார்கள். கிராமங்களில் குவியும் விவசாயக் கழிவுகளைளயும் இறைச்சிக்கழிவுகளையும் தின்று வாழ முடியுமா என்ன. தற்காலத்தில் பெருநகரங்களைத் தோண்டும் பணிகளில் நாம் ஈடுபட்டிருக்கிறோம். எதற்காகவோ தோண்டுகிறோம் அநேகமாக எல்லா யுகங்களிலும தோண்டிக் கொண்டே தான் இருந்திருக்கிறோம் என நினைக்கிறேன். எதாவது புதிய வாழ்க்கை அகப்பட்டதாவெனத் தெரியவில்லை. ஆனாலும் தேடிக் கொண்டும் தோண்டிக் கொண்டு குழிகளைப் பறிக்கிறோம். மூடுகிறோம். மறுபடியும் பள்ளம் வெட்டுகிறோம் மூடுகிறோம். நிலத்திற்குள் சில ஒயர்களை பிளாஸ்டிக் இரும்புக்குழாய்களைப் பதிக்கிறோம். உள்ளே இருக்கிற ஓராயிரம் பழையதைத் தூக்கி எறிகிறோம். தூசி, புகை, சாம்பல் பறக்காமல் அல்லது பறப்பதைக் காணாமல் நம்மால் வாழவே முடியாது என்பதாக நாம் இம்மூன்றையும் காதலாகி விரும்பி ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறோம். யாரும் எதற்குத் தோண்டுகிறீர்கள். என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்னதான் வேண்டுமென்று யாரும் கேட்பதில்லை. வழக்கமாக நீங்கள் கேட்பதைத் தருவதற்கு யாரும் பிரியப்படவில்லை. உங்களுக்கு இருபது வருடம் கழித்துப் பயண்தரப் போகிற வஸ்துகளைத் தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறது உலகம். அப்படியானால் உங்களுக்கான உலகத்தில் இருந்து கொண்டு எதையும் உணராமல் வேறு எதற்காகவோ குழிகள் வெட்டுகிறீர்கள். பாம்பாட்டி சித்தனின் கவிதைகள் இந்த முரண் சிதைவுகளைத் தொடர்ந்து பேசுகிறது. நவீன கவிதைகளின் கூறுகள் இவை. இனியொரு கவிதை
புற(ம்) 400
பல்வகை மரங்கள் சூழ்ந்த
கிராமப் புறத்தின்
பள்ளி மைதானத்தில்
தகப்பனும் சிறுவனும் ஒரு
மரநிழலில் புதைந்திருக்கின்றனர்
தங்களின் சூழலை
வெற்றாய் பார்த்தபடி

இலைகள் காற்றின் சலசலப்பை
மரத்துள் தேக்கியவாறுள்ளன
வேம்பின் பழங்களாக
உதிரும் அமைதியில்
மரம்
தன்னைக் கண்டு கொள்கிறது

உதிரும் இலைகள்
காற்றில் சுழலை
சுழலில் தமது நடனத்தை
அடையாளம் காண்கின்றன
மரம் தனது சமிக்ஞைகளால்
அவர்களுக்குள் எதையோ
விடுவித்துக் கொண்டிருக்கிறது

பன்னீர் மரங்கள்
அவ்வப்போது பூச்சாரலை
பெருங்காதலுடன்
அதன் கீழிருப்பவர்களின்
மேல் சொரிகின்றன

சற்று தொலைவில்
வாய்க்கால் பள்ளத்து நீர்
தண்ணீரில் குளிக்கும்
பறவையாகத் தன்னை
இனம் காண்கின்றது

சாம்பல் அணில்கள் மரங்களினின்று
குதித்தோடி குதித்தோடி
மென்னொலிகளால்
பள்ளியை நிரப்புகின்றன

அப்
புறம்
சூழ வருகின்றன
தொழிற்சாலையின் கழிவுகள்
மண் நகர்த்திகள் (எர்த் மூவர்கள்)
மற்றும் அதன் 400 காற்றாலைகள்-   பக்-19

        ஒருபுறம் நம்முடைய தொழிற்நுட்பம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். இயந்திர உற்பத்திகள் பெருக்க வேண்டும். ஆமாம் வேலைவாய்ப்பை நீங்கள் உறுதிப்படுத்தினால் இயந்திரங்கள் பெருகும். இயந்திரங்கள் பெருகினால் சூழல்கள் கெடும். நோய்கள் அதிகமாகும். நீர் மாசுபடும். அதற்காகப் படிக்கிறவர்களை, தொழிற்நுட்பம் படிப்பவர் களை, இயந்திரவியல் படிப்பவர்களைத் தடுக்க முடியாது. சட்டம் படித்தவர்களுக்கு வேலை வேண்டுமென்றால் குற்றங்கள் பெருகவேண்டும். சாதிய குற்றங்கள் உள்பட மத இனக் குற்றங்கள் பெருகினால் மட்டுமே உலக நீதிக் கோட்பாடுகள் நிலைத்து நிற்கும். சட்டங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய முடியும். சமீபத்தில் ஒரு உரையாடலைக் கேட்டேன். ஒரு ஒப்பந்தக்காரர் தன்னுடைய எர்த் மூவர்கள் பொக்லைன் இயந்திரங்கள் வேலையில்லாமல் இருக்கிறது. நீங்கள் ஏதாவது ஒரு பணியை ஒதுக்க வேண்டும் அல்லது புதியதாக ஒரு பணியை நீங்கள் உருவாக்க வேண்டும் என்றார். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி இன்னும் ஒப்பந்தப் புள்ளிகள் (டென்டர்கள்) திறக்க வில்லை எந்த ஆர்டர் யாருக்கு வரும் போகும் எனத்தெரியாது அதுவரையிலும் காத்திருக்கவும் என்கிறார். அதற்கு அந்த இயந்திரவாசி உடனே. அப்படியானால் இயந்திரங்கள் ஓடாமல் இருந்தால் மெய்ட்டன்ஸ் செலவு அதிகமாகும் அதனால் நான் தற்பொழுது நிலுவையில் உள்ள இடங்களில் உள்ள மரங்களை, புதர்களை சுத்தம் செய்கிறேன். நீங்கள் பார்த்து டீசல் செலவுக்குக் கொடுத்தால் போதும் வெற்றி பெறுகிற டென்டர்காரர்களிடம் சொல்லி எனக்குப் பணம் பெற்றுக் கொடுங்கள் என்கிறார். அந்த இயந்திரங்கள் எந்த உத்தரவும் இல்லாமல் மரங்களையும் புதர்களையும் வெட்டப் போகிறது. இப்படித்தான் நாட்டில் நடக்கிற பல இயற்கை அழித்தொழிப்புகள் நிகழ்கிறது. யார் கேட்பது. கனரக இயந்திரங்களை வைத்திருப்பவர்கள் இயந்திரங்க ளின் மீது பெரும் அக்கறை செலுத்துவதில் கவனம் கொள்கிறார்கள் இயந்திரங்கள் மீது செய்த முதலீடுகளை விரைவில் எடுத்தாகவேண்டும். சமீபத்தில் கட்டுமானத் தொழில் சம்பந்தமான கண்காட்சிக்குப் போயிருந்தேன். அங்கு வைக்கப்பட்டிருக்கிற இயந்திரங்கள் நிச்சயமாக இநத உலகத்தை கொத்திக் குதறி இயற்கையை நாசம் செய்யாமல் விடாது. நிச்சயமாக அந்த இயந்திரங்களின் உரிமையாளர்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. அல்லது அமைதியாக இருக்கவும் இயந்திரங்கள் விடாது. அதன் ஆக்ரோசமான இருப்பு நிச்சயம் முதலாளிகளை உறங்கவிடாது.
இந்தக் கவிதை ஆக்கத்திலும் மிகச் சிறப்பாக வந்திருக்கி றது. நவீன காலத்தைப் பேசுகிறது. மரங்கள், பறவைகள் கனிகள் மலர்கள் என்பதாக கவிதை முழுக்கவும் வாசக மனம் மூழ்குவதற்கான தரிசன இயல்பும் உள்ளது. தொகுப்பில் முப்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளில் மனுசக் கோட்பாடுகளும் மனிதாபிமானத்தின் கோட்பாடு களும் இரண்டும் உரையாடிக் கொள்கிறதோவென ஐயம் வருகிறளவில் நியதிகள் பேசப்படுகிறது. அவர் கற்ற உளவியல்,ரசாயனம். மாற்றுத்திறனாளி குழந்தை களுக்கான பயிற்சிகள் கற்றிருப்பதால் என்னவோ கவிதைகளில் ஒரு வித ஸ்பரிசமிக்க பரிவுணர்ச்சிகள் மேலோங்கிய கவிதைகளாக அறியப்படுகிறது. ஒரு வகையில் மொழிமருத்துவமும் அவசியப்படுகிற காலம் இது. ஆட்டிசம் பாதித்தவர்களின் மனநலம் பற்றியும் அவர்களின் தனித்த உலகம் பற்றிய விவரணைகள் சிறப்பாக உள்ளது.
“இறந்தவர்களை அலங்கரிப்பவன்“ கவிதை பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். சமூகத்தில் பேசப்படாத வர்களாக இந்த இறந்தவர்களை அலங்கரிப்பவர்கள் இருக்கிறார்கள். கிராமப்புறங்களில் செய்யப்படும் மனித உருவத்திற்கான அதிகபட்ச மரியாதையுடன் ஒரு மனித னுக்கு செய்யப்படுகிற அலங்காரமாக இந்தச செயல்பாடு அமைந்திருக்கிறது. முதலில் கவிதை
“இறந்தவர்களை அலங்கரிப்பவன்“
சாவைக் குறித்த கனவுகள் பொய்த்துவிட்டன அவருக்கு மரணம் என்ற நித்தியத்தில் ஆழ்ந்திருக்கிறார்
அவரை இடையுறு செய்வதற்கு
எப்போதும் வருத்தப்படுபவனாயிருக்கிறான் இறந்தவர்களை அலங்கரிப்பவன்

சாவிற்கோ சடங்களுக்கோ அவன்
எப்போதும் முகத்தைக் காட்டுவதில்லை
கைகளில் அணிந்த உறைகளோடு
கண்கள்வரை மூடிய முகத்தோடு
அறுவை சிசிச்சை நிபுணனைப் போல்
சவத்தைக் கழுவுகிறான்
............ பக்-22
                        
கவிதைகளுக்குள் உறைந்து கிடக்கிற அவர்களின் கலை நயமிக்க வாழ்க்கை பற்றிய பல உதாரணங்களைக் கூற முடியும் ஆனால் இந்த இடத்தில் கிக்கிட்டி என்கிற எங்கள இருகூர் பகுதியில் வாழ்கிற சவரக்கலைஞன் பற்றிச் சொல்லவேண்டும். சுமார் முப்பது வருடங்களாக மிகவும் ஆத்மார்த்தமாக அந்தப்பணியை அவர் செய்கிறார். ஒரு மனிதன் மரணம் நிகழ்ந்த பிறகு உடனடியாக தேடப்படுபவராக கிக்கிட்டி இருப்பார். அவருக்கும் அவர் கத்திக்கும் வேலை வந்த மகிழ்ச்சி அவருக்கும் கிட்டும். ஏற்கெனவே பல ஆபர்கள் அவருக்கு இருக்கும். அதற்கு ஏற்றது போல அலங்காரங்கள் செய்வார். முதலில் மயானம் போகிற உடலுக்கு முன் உரிமை தருவார். அவருடைய பணியும் உழைப்பும் இலக்கியப் பிரதிகளில் பேசப்பட்டிருக்கிறதாவென தெரியவில்லை. பாம்பாட்டி சித்தன் கவிதை நூலுக்குத் தலைப்பையே வைத்துள்ளதை வரவேற்கிறோம். உறவினர்கள் பல இளந்தாரிகள் குடித்திருக்கிற இடமாக அந்த அலங்கரிப்பு நிகழ்வு நடக்கும். கடவுளுக்குச செய்யப்படுகிற எல்லாச் சடங்குகளும் கடவுளாக அல்லது கடவுளுக்கு அருகில் சென்று விட்ட அந்த மனிதனுக்கு செய்யப்படுகிற பொழுது அலங்கப்பதற்கு கிக்கிட்டி தன் கத்தியை எடுப்பார். குளிப்பாட்டுவார். மலர்களால் அலங்கரிப்பார்.சவரம் செய்துவிடுவார். மஞ்சளும் திருமஞ்சணமும் எண்ணை, அரப்பு. இளநீர் உள்பட அணைத்து இயற்கை வஸ்துகளும் பயண்படுத்துவார். அலங்காரம் நடக்கும் பொழுதே கண்டு குடித்த இளந்தாரிகள் சொல்லுவார்கள் “ உன்ற கைப்பக்குவத் திக்கு வேண்டியாவது சாகலாம்ணு இருக்குதுடா கிக்கிட்டி..“ கிக்கிட்டியின் பணி பதினாரு நாட்களுக்கு அந்த மனிதனின் குடும்பத்தாருடன் நட்பும் உறவும் தொடரும்.மனித வாழ்க்கையின் இருப்பும் கழிவும் இதுபோன்ற கலைசம்பந்தமான சடங்குகளில் வைத்துப் போற்றப்படுகிறது என்பதை பாம்பாட்டி சித்தன் தன கவிதைகளில் தெரியப்படுத்துகிறார். இந்த நேரத்தில் ஒன்றைத் தெரியப்படுத்தவேண்டும் இறந்தவர்களை அலங்கரிப்பவர்கள் கையுறைகளைப் பயண்படுத்து வதில்லை. கிராமப்புறங்களில் சடங்களுக்கு மிகுந்த மரியாதை தருவார்கள். நடுவீட்டில் வைத்து அதாவது கடவுள் படங்கள் அகற்றப்பட்டு கடவுளாக கருதிதான் சில குடும்ப சடங்குகள் செய்யப்படுகிறது. சாதிகளுக்குரிய சடங்குகளை அவசியம் செய்வார்கள். குறிப்பாக இடைச் சாதி உழைப்பு சாதிகள் அனைத்தும் அந்த சடங்குகளில் ஈடுபடுகிறளவில் பங்கேற்க பலசாதிமக்கள் உதவுவதை நாம் காணமுடியும்.
தொகுப்பின் கவிதைகளில் உள்ள கெட்டித்தன்மை நம்மை வியப்பிலாழ்த்துகிறது. ஆய்வுக்கூடத்தின் எலிகளாக குரங்குகளாக பல்லாயிரம் உயிரிகளாக அவற்றின் ஒன்றாகத்தான் இந்த மனிதவாழ்வும் பொருந்தி யிருக்கிறது. உலகமே ஒரு பரிசோதனைக் கூடம்தான். நம் மொழியை, நம் கவிதையைத் திரும்பத் திரும்ப சோதித்துக் கொள்வதில் படைப்பிலக்கியம் வளர்கிறது. மறுபரிசீலனையும் மறுஉருவாக்கமும், மாற்று நிலையும் அவசியம் என்று உணர்த்திய தொகுப்பு அளித்த கவிஞர் பாம்பாட்டி சித்தனுக்கு வாழ்த்துக்கள்..
“இறந்தவர்களை அலங்கரிப்பவன்
கவிதைகள்
ஆசிரியர்-பாம்பாட்டி சித்தன்

வெளியீடு
காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் பி லிட்
669 கே.பி சாலை
நாகர்கோவில் 629001