வியாழன், 2 ஏப்ரல், 2015

மு.ஹரிகிருஷ்ணனின் “அழிபசி” கவிதைகள் குறித்து.



“அழிபசி “
தவசிக்கருப்புசாமி ( மு.ஹரிகிருஷ்ணன்) கவிதை நூல் குறித்து-   ---    இளஞ்சேரல்
      

 தமிழ்க் கவிதை வடிவங்களில் எத்தனையோ விதமாக வடிவுகளில் எழுதிப்பார்த்திருக்கிறது காலம். ஒப்பாரிப்பாட்டுகள்,குறிப் பாட்டுகள், விடுகதைப் பாட்டுகள். சிலேடைப்பாட்டுகள். என்றாக தொடர்ந்து நீண்ட கதை ஒரு நிலைக்காலத்தில் அதாகப்பட்டது எல்லா ஒலகச் சொத்துக்களையும் தாராளம் பண்ணியதும் பொறகுக்கு வார எல்லா வரும்படிச் செலவாட்டங்களும் உலப் பொதுமையா ஆக்கினதுமான உலகமயமாக்கினது ஆக காலம் தொண்ணூறுக்கும்னு நாம கணக்கு வெச்சிக்கலாம். எழுத்தில். நடையில, ஆக்கத்தில, பேச்சு வழக்குலயெல்லாம் மொழி சுத்தமாயிட்டு. ஆம்மா. அப்பிடியொரு சுத்தவத்தம். எல்லாத்திலயும் சாணி வழிச்சிட்ட தீட்டு. பேசினா, கூடினா, அழுதா, பொறந்தா. பெத்தா முச்சுடும் சுத்தவத்தப் பேச்சுதான்.
மூத்தகுடி பிள்ளை செல்லப்பிள்ளை
இளையகுடி பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை
கூத்தியார் சினையானால் கலி தாங்குமா
மைக்கண்ணிக்கு மசக்கை மாப்பிள்ளைக்கு அவஸ்தை
மாத்திரைக்கு கரையவில்லை
வாரிக்கொடுத்தாலும் காரியமாகாது
மருத்துவர் ரொம்போ நல்லவர்
மேலே மொழுக்கு உள்ளே லொடக்கு
பாத்தியப்பட்டவன் தொடர்பெல்லைக்கு அப்பாலிருக்கிறான்
எருக்கங் குச்சியோ பொவிலைக்குச்சியோ
உசுர எடுக்காமலா போய்விடும்- பக் 25
  
இந்தக் கவிதைக்குள்ளாக பேசப்படுகிற செய்திகள் எத்தனையெத்தனை. எத்தனை காலத்தின் இழிவும் மரபும் சமகாலத்தின் தொடர்ச்சியும் வருகிறது. ஆனால் காலம் முழுவதும் பெண்ணுக்கு ஒரே மாதிரியான வலிதான். அவள் கூத்திச்சியாக இருந்தாலும் செரி..மகாராணியாக இருந்தாலும் சரி. போர்க்களத்திலிருந்தாலும் சரி. அல்லது கந்துவட்டி வரவு செலவுகளானாலும் சரி, நூறு நாள் வேலைவாய்ப்புத்திட்டமானாலும் சரி.. தேசிய ஒலிம்பிக் வீராங்கனைகளானாலும் சரி..
கவிதையாக்கத்தில் இந்தக்கவிதைகள் முழுக்கவும் எகன மொகனை என்று சொல்லப்படுகிற சந்த வித்தைகள் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அது தாள சங்கதிகளுடைய விருத்தங்கள். கட்டுகள். ஹரி இசைக்கருவிகள் வாசிக்கிற வகையறாவாகவும் இருப்பதால் அந்தச் சொற்கள் வார்த்தைகளாகவும் வந்து நம்மையறிமால் தாளக்கட்டு வகைளை எண்ணச் சொல்கிறது. கவி காளமேகமும் பலபட்டடைப் புலவர் களும் நினைவில் வாராமல் இல்லை. இவர்களுக்கு ஒரு மரபில்லாமல் போனால் நம்மை ஊர் மெச்சுமா என்ன.
இதே வாழ்வின் கதையை நம்ம ஆள் கவி காளமேகம் கூட கூத்தியாரையும் குரங்கையும் ஒப்பு நோக்கிய பாடல் ஒன்று கிடைத்துள்ளது.
ஓட்டம் கடியதால், உள்ளவரை மேவுதலால்,
சேட்டை எவரிடத்தும செய்தலால்- நாட்டமுடன்
காத்திரத்திற்குட்டியுறக் கட்டுதலால், தெட்டுதலால்
கூத்தியாருக்கு நேராம் குரங்கு

பெண்கல்வி  உள்பட பெரிய பெரிய மாத்தங்கள் வந்திட்டு. மேநாட்டுக்கலிவி, உள்நாட்டுக் கலிவி, இசங்கொள் இப்டியாட்டு நெற வெசனங்களும் வெணயங்களும் வந்திட்டாக பெறவு கம்ப்ளீட்டா மாறிட்டு. நம்ம ஆளுக நம்ம சொந்த தயாதிக கூட சுத்த வத்தப் பேச்சுதான். தெரியமி கூட ஊர் வழக்குப் பொழப்பு பேச்சு கெடையாது..போட்டும் நாசமா..
        ஹரிகிருஷ்ணன் கதைகள் எழுதறமாதிரியே “சேப்“ ல எழுதியிருக்காப்டி. கவிதைகள்ல நம்ப முடியல. ஆமா கவிதைகள்னா எப்படியிருக்கணும். சுத்தவத்தமா பேச்சுப் பதனமா. பொழங்கற பண்டமா இருக்கணும்லியா அதான இங்க வெனயம் அப்படியில்ல..கொஞ்ச நஞ்சம் நிதானம் தப்பியிருக்குதுதான் சொல்லணும். அதுலதான் இருக்குது நல்ல விசேசம்ங்கறன்..
    ஹரி எழுத்த வாசிச்சம்ணு வெய்ங்க..அப்படியொரு சொகம் இருக்கும். என்ன சொகம். நம்ம சொந்த சாதிக்காரப் பயலுக உள்பட மத்த பிறவெட்டு சாதிக்காரச் சனங்க அதாவது நம்ளுக்கு ஓடமாட ஒத்தாசிக்கற பயலுகளோட பத்திருபது வருசம் கேப் உட்டு மறுடியும் பேசிக்கறம்லியா அந்த சொகம்ங்கறன். நம்ம தமிழ்ல கொஞ்சம் வழக்காறுக நெறைய எழுதியிருக்காங்க..இல்ல ன்னு ஒரே முட்டா போட்டுத்தள்ளிற முடியாது.. கி.ரா. கழனியுரன், தோப்பில் முகமது மீரான், தங்கர் பச்சான், சோ.தருமன் இப்படிக்கா பல பெரியாளுங்க காபகத்திக்கு வராப்டி. வாசிக்கயில அப்படியே அந்த மண்ணும் காலமும் மனுசங்களும் கூடிக்கே வாரதுதான் இதனோட விசேசம். எல்லாப்படைப்பாளிங்களும் மண்ணுக்கார மனுசங்கதான் இருந்தாலும் ஏன் அவிங்கனால எழுத முடியாம ஆகுது. அதே மாதிரி ஏன் ஹரி மாதிரி எழுதறவங்களும் இருக்காங்கன்னு நாம கண்டுகிறதுதான் பொது நோக்கமுள்ள விமர்சனம்ங்கறன். நம்மாளுக கிட்ட இதச் சொல்ல முடியாது கேட்டா மோளம் பாங்க.. அவன் மொதல்ல கால்குலேட்டர் எடுத்துக் கணக்குப் போட ஆரம்பிச்சிருவான். 234-545 சட்டமன்ற பாரிலிமெண்ட் கணக்கு..டேய் இந்தக் கவிதைய கட்டுரைய கதைய நாவலப் படிச்சு என்ன்னு சொல்லாறான்னா.. செல்ல நோண்டுவானு கால்குலேட்டர நோண்டுவான்னு ஆனா எதையும் சொல்லமாட்டானு. குறிப்பா இந்த கெழட்டு கட்டைக போடற கணக்கு மாதர யாரும் போட முடியாது. பொஸ்தகமும் போட்டுட்டு மசாசும் பண்டியுட முடியுமா அதுவும் தமிழ் மசாசு..நம்மாள முடியாதுன்னு ஒதிங்கிட்டா வக்காலி நீ எலக்கிய உலகத்தில கெடையாது. மொதல்ல ஒரு குருப் ரெடி பண்ணி தாசா வாசிக்கவாவது செய்யணும்னு வெங்ய்க.. இதெல்லாம் தாண்டிதான் எதாவது படைப்புல செஞ்சாகணும். சீரும் செஞ்சாகணும்.பொழப்பும் நடக்கணும் பாடுவாசியும் கிளீன் பண்டணும். இது ஆகாதுன்னுட்டு பாய்ஞ்சர்றவங்களும் இருக்காக..போட்டும். நம்ம பொழப்ப..கதைய..அன்னாடம் தினத்தில நடக்கற கதைகளை..சின்ன சின்ன துடுப்பதி வண்டங்களாட்டம் எழுதறம்னு வெய்ங்க..நமக்கு ஒரு சந்தோசம். படிக்கறவங்களுக்கு..அடடா..பார்றா. நம்ம. வாழ்க்கையில்லயா இது.. நம்ம சனம் எப்படியெல்லாம் காலந்தள்ளிச்சி...எது நீச்ச போட்டிச்சி..குறிப்பா நம்ம ஆட்டக்காரங்க..வேசங்கட்டிக..பாட்டுக்காரனுக..பத்தியெல்லாம் யாரு கவிதையா எழுதறது. அவிங்களுக்குன்னு மொழியில்லயா. படைப்பில்லயா, அவிங்க இந்த சமூகத்திற்குள்ளாறயும் வாழலையா. அவிங்க கிட்ட ஆத்மாத்மான கதைக இல்லாமயா போச்சு..இப்டிதான்  யோசிக்கிறாரு நம்ம ஹரி. சரி நாம பொது வழக்குக்குப் போவம்..இரண்டு எழுத்து நடையும் எப்படி மாறுதுன்னு பாருங்க..இந்த வித்தியாசம்தான் வாழ்க்க..வருமானம். கலை, பண்பாடு. இன்ன பிற இத்யாதி தண்ணி மொண்டுக்க பிடிக்க நடக்க இருக்க பேழ..போய் வர மாட்டுவண்டித் தடம் சகிதம்..னு செக்குப்பந்தில எழுதற மாதிரி... மேல வாசிங்க..
பாட்டி சமைந்த ஜோருக்கு கூத்தின் பேரில்
நாட்டமானது கோமாளித்தாசனுக்கு
கட்டித்தொண்டை கிழடு கிண்டு ஆகாதென்றவன் பேய்க்கு
மொண்டி மொடத்தொடு செவிட்டுமையும்
சேர்ந்தாடுமென்று திரு நீறு கொழித்தோம்
பல்லால் முடி போட்டு தட்டுவாணி கல்யாணம்
வைத்தாடச் சொல்லி தாம்புலம் தந்தான்
ஆடாத ஆட்டம் பாடாத பாட்டென்று உபரி சம்பளமும்
ஒரு நோட்டு தரகுங் கேட்டு நாங்களதை நாவால் அவிழ்த்தோம்
மணியம் இன்னதென்று இல்லை வரும்பிடி கணக்கில்லை
குண்டையை விற்றுத் தருகிறேன் கூலியை
ஏற்றிக் கேளுங்கள் என்றான்
ஆயிரம் வேண்டாம் லட்சம் வேண்டாம்
ஒரு கோடி கொடுவெனக் கேட்டோம்
ஆறுஜதை துண்டு கிழித்தால் அரைச்சுற்று வாராதென
பகடி பேசி சிரிக்கிறந்த பகல்வேசம்----பக் 61

          தொகுப்பில் உள்ள பல கவிதைகள் கூத்து நிகழ்வைக் காண்பது போன்ற உணர்வினைத் தருவது புதுமையாக இருப்பினும் அதுவே சோர்வு தருகிறது. உள்ளார்ந்த கவிதைகளுக்குள் சொல்லப்படுகிற கதை மாந்தர்களின் வாழ்க்கையும் வாழ்க்கையே கூத்துதான்..கூத்துதான் வாழ்க்கை என்பதாக உணர முடிகிறது. எளிய மனிதர்கள் தங்கள் உரையாடலில் மிகச் சாதாரணமாகவே “ அந்தக் கூத்த ஏங்கேட்கற..“ என்பதை நாம் காணமுடியது. உலகமே நாடகமேடை..நாம் அனைவரும் நடிகர்கள் என்று சேக்ஸ்பியர் சொன்னதும் நினைவுக்கு வராமலில்லை.
     இந்தக் கூத்து பிறந்த கதை மிகவும் சுவராசியமானது. இயற்கையின் உந்துதலால் அசையும் மரங்களைப் பார்த்து ஆடும் பறவையைக் கண்டு கற்றுக் கொண்டவன் மனிதன். நாகரீகம் காணாத மனிதன் மெல்ல மெல்ல தன் உடலசைவுகளை தனக்கு நேரும் ஆபத்தான காலங்களில் உடல் வளைகிற தன்மையை அறிந்து ஆச்சர்யம் கொண்டான். அசைவுகளைத் தரம் பிரித்தான். அதுவே காலப் போக்கில் கூத்தாக விரியத் தொடங்கியது. பிற்பாடு நாட்டியமாகவும் நடனங் களாகவும் வளர்ச்சியடைந்தது.
ஆடற்கலையை கூத்துக்கலை என்றுதான் அழைத்தானர் பண்டைய தமிழ் அறிஞர்களும் மக்களும். கூத்துக்கலை மிகவும் பழமையான மரபு. சங்க காலத்தில் ஆடற் கலையும் கூத்துகளும் செம்மையாக நடத்தப்பட்டதை அறிவோம். பழந்தமிழ் நூற்பாக்களில் செய்திகள் உண்டு. பல அறிய கூத்துக்கலை வடிவங்கள் மறைந்து போய்விட்டன. அழிந்தவைகளில் முக்கியமானவை பதினோராடல் என்னும் வகைகள். மனிதர்கள் ஆடிய இந்த ஆடல்களும் கூத்திசையும் ஆதிகாலத்தில் தெய்வங்கள் ஆடியதாக அறியப்பட்டது. அந்தப் பதினோராடல்கள் என்னவென்றால்- அல்லியக்கூத்து, கொடுகொட்டியாடல்,குடையாடல், குடக்கூத்து, பாண்டரங்கம், மல்லாடல், துடிக்கூத்து, கடையக்கூத்து, பேடாடல்,மரக்காலாடல்,பாவைக்கூத்து என்பது.இவற்றில் முதல் ஆறு ஆடல்களும் நின்று ஆடுவது, பின் ஐந்தும் வீழ்ந்து ஆடுவது.
கடலுக்கடியில் மூழ்கிக்கிடந்த காவிரிப்பும்பட்டினத்தில் இந்திரவிழா நடந்தபோது அந்நகரத்தின் வீதிகளில் பலப்பலக் காட்சிகள் தெண்பட்டதாம். அப்பொழுது அவற்றில் ஆடிய ஆட்டங்களில் பேடிக்கூத்தும் இடம் பெற்றதாக
நீள்நிலம் அளந்தோன் மகன் முன்னாடிய
பேடிக் கோலத்துப் பேடுகாண் ஆகும்
( மலர் வளம்புகாதை –மணிமேகலை)
என்றும் சங்க காலக் கூத்து வகைகளில் முக்கியமானவையாக நாம் அறியப் பெற்றதில்
மெய்க்கூத்து, அவிநயக்கூத்து,வென்றிக்கூத்து, வேத்தியல் கூத்து, பொதுவியல்கூத்து, சாந்திக்கூத்து, விநோதக் கூத்து, கழைக்கூத்து, குடக்கூத்து, குரவைக்கூத்து. வசைக் கூத்து, தோற்பாவைக் கூத்து. என்பதாக அறிந்துள்ளோம்.
மேலும் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை 12..15 ன் பாடலில்
இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்கு அறிந்து ஆங்கு
       இந்திய மரபின் தொடர்ச்சியான வட்டார வழக்குப் புதினங்கள்,கவிதைகள் வந்து கொண்டேயிருக்கிறது. அசாம்.மிசோரம்,சண்டிகார் போன்ற மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநில மக்களின் இலக்கியவகைகள் மரபான மொழியின் சிக்கல்களைக் கொண்டுதான் எழுதப்படுகிறது. இந்தி,மராட்டி,பெங்காலி மொழிகளிலிருந்து தங்களுக்கான வாழ்வியல் மொழியாக இந்த வடகிழக்கு மாநில மக்கள் குறிப்பாக மலையக தோட்டத்தொழில் சாந்த மக்கள் தங்கள் மொழிகளை மேலும் குறியீடுகளாக மாற்றிக் கொள்கிறார்கள். வழக்குப் பேச்சு மொழிகளை வேறுமாதிரி தங்கள் உயிர் உடைமைப் பாதுகாப்பிற்காக சில புதிய வகைச் சொலவடைகளை உருவாக்கியே வருகிறார்கள்.
                தமிழ் மொழியின் பேச்சு அடைவுகளும் வட்டார வழக்குச் சொலவடைகளும் இப்படித்தான் தங்கள் பொருள் பற்றிய மீறல்களை உழைப்பாளர்கள் உருவாக்கினார்கள். அரசு ஆட்சி அதிகார மையங்களுக்கு எதிரான குறியீடுகளை மக்கள் முதலில் தங்கள் மொழியிலிருந்து துவக்கினார்கள். சாதாரண வழக்குப் பேச்சிலிருந்து ஒரு வாக்கியத்தை தங்கள் பாதுகாப்பிற்கா கவும் வேறொரு நிலத்தவன் தங்கள் பாஷையை அத்தனை எளிதில் கற்றுக்கொள்ளக் கூடாது. என்பதில் கவனமாக சில சொற்றொடர்களை உருவாக்கினார்கள். அப்படித்தான் தமிழ் மொழியிலும் வழக்காறுகள் உதித்தது உழைப்பு மிகுதியான பக்கங்களிலிருந்தெல்லாம் மொழி உடைந்து சிதறி புதுப்புதுவகையான மொழியும் எழுத்தும் உருவானது. அது தமிழா அல்லது தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் கலந்து பேசப்படுகிற கொச்சைத் தமிழாகவும் அறியப்பட்டதை அறிகிறோம். அதற்கும் அகராதிச் சொல்லும் கலைச்சொற்கள் பிரிவும் உண்டு. இப்படியாகப் பிரித்து மக்களையும் பிரித்து மக்களை மண்ணை கலையைக் கொண்டுவிடுவார்கள் என்பதால்தான் உழைக்கும் மக்கள் தங்களை தங்கள் மொழியினைப் புதுமைப்படுத்திக் கொள்கிறார்கள்.
       மு.ஹரிகிருஷ்ணன் எழுத்துக்களை நான் அப்படித்தான் பார்க்கிறேன். வாசிக்கிறேன். தமிழ் மொழி உயிருள்ள மொழி என்பதாக அறியப்படுவதே இந்த வட்டார வழக்குச் சொலவடைகளால்தான். புரியவில்லை யென்கிற வர்களிடம் ஒன்று சொல்ல்லாம் உன் தந்தையிடம் கேள் நிச்சயம் பொருள் கிடைக்கும் எனலாம்..தமிழில் பள்ளு இலக்கியங்கள் உள்பட பல நாட்டுப்புறப்பாடல்களிலிருக்கிற விடுகதைப்புதிர்களில் உள்ள தொன்மக்கதைகளின் வடிவமாக ஹரியின் கவிதைகள் தொடர்கிறது. கவிதைகள் என்பதாக அறியப்பட்டுப் பதிக்கப்பட்டிருந்தாலும் பாட்டுச் சந்தங்களும் மோன வகைகளாகவும் உள்ளது. கவிதை என்பதே பாடலாகப் பாடப்படுவதுதான். பாட்டாகப் படிப்பதுதான் கவிதை. ஆனால் ஏற்கெனவே சொன்னது போல சுத்தவழக்கு வந்த காரணமும் வாசிப்புத் தன்மை மாறியதாலும் நாமும் மக்கள் மனநிலைக்கு மாறிக் கொண்டோம்.
            தொல்காப்பியமும் நன்னூலும் சொன்ன எல்லா இலக்கிய இலக்கண மரபுகளையும் மீறிடத் துவங்கியதின் அடையாளமாகத்தான் தற்கால நவீன இலக்கிய மரபு தொடர்கிறது. இந்தக் கவிதைகளில் ஆங்காங்கு கூத்திசை மரபு பாடல்களின் தாக்கம் உள்ளது. திருமூலர் சொன்ன கூத்து மரபிலிருந்து பத்தாம் நூற்றாண்டின் நாட்டிய மரபுகளும் இந்தக்கவிதைகளில் வருகிறது. இயல் இசை நாட்டிய மரபுகளுக்கு எல்லாம் ஒரே சந்த வகைகளும் தாள வகைகளும் ஒன்றுதான். அடிப்படையிலக்கணங்கள் அனைத்தும் ஒன்றுதான். கூத்திசை மரபுகளும் நாடோடிப்பாடல்கள், விடுகதை மரபுகள். ஒப்பாரி, தாலாட்டு, உள்பட தமிழிசை மரபில் பேசப்படுகிற எல்லா வகைகளும் ஒரே அடிப்படைதான். அப்படியாகவே இந்தக்கவிதைகளையும் நவீன இலக்கிய வகையின் கவிதைகள் என்றே அறிந்து கொள்கிறேன். நாட்டுப்புறங்களில் குறிப்பாக சிறுதெய்வ நாட்டார் தெய்வ அரங்குகளில் பாடப்படுகிற எல்லாப் புத்தாக்கப் பாடல்களும் இந்த வகைமை சார்ந்தவையே. கிருத்துவ தேவலாங்கள் உள்பட எழுதப்படுகிற வரிகள் யாவும் செரு சலத்திற்குரியவை மட்டுமல்ல நமது வளவுகளின் சரித்திரமும் சொல்பவைதான். இங்கு ஒவ்வொரு வரியும் மிகச்சாதாரணமான வரிகள் அல்ல. கூத்து வேசக்காரனின் வாழ்வு. அவனின் கலையின் பொருள். அவன் ஆன்மாவின் சங்கீதம். அவன் கட்டும் அடவுகளில்  அவனின் பரம்பரைக் கால்களின் ஆட்டங்களின் மிச்சம்.
மு.ஹரிகிருஷ்ணனின் இந்த “அழிபசிகவிதைகள் வாசக மனதின் பல திசைகளைக் காட்டியிருக்கிறது. தொன்மையான காலத்தின் கிளைகளை காய்ந்து மிஞ்சிய சருகுகளை ஞாபகப்படுத்தியிருக்கிறது. இதிகாசப் படைப்புகளில் செவ்வியல் தன்மையைத் தருகிறவை இந்தக் குறுங்குறு கதைகள்தாம். அரக்கன் அரக்கி கடவுள் பக்தன், சாபம் வரம் அழிவு போன்ற செய்திகளுக்குள்ளாக சொல்லப்படுகிற நீதியும் அறமும் தர்ம சிந்தனைகளும் நமக்கு ஆச்சர்யமும் விகாசமும் தருபவையாகவே இருக்கிறது. மீண்டும் நமக்குத் தீண்டுவதற்கான உணர்ச்சி களைத் தரவல்ல பிரதிஉடலாகவே இந்த தொன்மங்கள் விளங்குகிறது என்பதை ஹரியின் கவிதைகள் சொல்லுகிறது. நமக்கு பஞ்ச காலத்தில் வள்ளல்கதைகள் கேட்டிருக்கிறோம். கோடைகாலத்தில் மழை பற்றிய செய்திகள் உவப்பு தரும். மழையில் தீயும் நிலச்சூட்டில் நிழலும் நமக்க உவப்பு.
அப்படித்தான் இந்த நெறியற்ற படைப்பு தார்மீக உணர்வுகளற்றுப் போன ஒத்துக்கு மத்தள  நவீனப் படைப்பு காலத்தில் எல்லாம் செத்து சுடுகாடாய் ஆய்ப் போன காலத்தின் வாய்க்கால்களில் மிதந்து வருகிறது ஹரியின் அழிபசி. இந்த நம்ப முடியாத மாந்தர்களின் கதையின் வருகை. இலக்கியப் பிரதிகளில் முக்கியமானதாகவே படுகிறது. கள்ள மௌனம் கொண்ட செவிடர்களின் காதுகளில் ரசனையெனும் கும்பி பொருத்தி ஈயம் காய்ச்சி ஊதுவதையாவது நிறுத்தாமல் ஊதிவைப்போம்.
அழிபசி
கவிதைகள்
தவசிக்கருப்புசாமி (மு.ஹரிகிருஷ்ணன்)
வெளியீடு-மணல்வீடு- ஏர்வாடி-குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டுர் வட்டம் சேலம் மாவட்டம்-636 453
98946 05371






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக