சனி, 5 செப்டம்பர், 2015

நிஷா மன்சூர் கவிதை நூல் நிழலில் படரும் இருள்..

“நிழலில் படரும் இருள்“ நிஷா மன்சூரின் கவிதைகள் குறித்து
கவிதைக்குத் திரும்பிய மனம்

கவிதைகளிலிருந்து விலகி இருத்தல் சாத்தியமாகாது. அது ஒரு நீர்மையாகிற இன்மையெனலாம். கவிதைகள் எழுதப்படாத நாட்களில் கவிதை எழுதியவன் கவிதைகளுக்குள் நுழ்ந்து வாழ்ந்து கொண்டிருப்பான் எனலாம். “ஆடின காலும் பாடின வாயும் சும்மா இராது“ என்பதாக. சமீப நாட்களில் கவிதைகள் எழுதாத மனங்கொண்டு இருந்தேன். அப்படியாகவே நிறைய கவிஞர்கள் கவிதைகள் எழுதாமல் இருக்கிற கவிஞர்களும் இருக்கவே செய்கிறார்கள். கவிதைகள் எழுதாத கவிஞர்களின் நாட்கள் என்று கூட தலைப்பிட்டு நிறைய கவிதைகள் எழுதக் கூட இயல்பாக யாருக்கும் வாய்ப்புள்ளது. ஒரு வகையில் நிறைய எழுதுகிற கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கிறபோது சரி நாமும் சற்று ஓய்வெடுக்கலாம் என நினைப்போம். ஆனாலும் சொற்கள் தத்தளித்துக் கொண்டு எப்படியாவது வரியாக மாற சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டேயிருக்கும்.
      அப்படித்தான் தன் வாழ்நாளில் பாதி வருடங்கள் கவிதைகளும் கவிதைகளை எழுதிக்கொண்டுமிருந்த ஒரு கவிஞரின் தொகுப்பு சமீபத்தில் வாசிக்க கிடைத்தால் புதிய வெளிச்சமாக அமையும் அல்லவா. அப்படித்தான் நிஷா மன்சூரின் “நிழலில் படரும் இருள்“ கவிதைத் தொகுப்பைச் சொல்ல லாம்.1995 ல் தன் முதல் தொகுப்பான “முகங்கள் கவனம்எனும் நூல் வெளியிட்டு பிறகு 2000 ஆண்டில் சிறந்த இளங்கவிஞர் என விருது பெற்றவருமான நிஷா மன்சூர் தன் புதிய கவிதைகளுடன் இது வரையிலான கவிதைகளையும் தொகுத்துள்ளார். எண்ணிக்கையில் அடர்த்தியும் கனமும் குறைந்த கவிதை நூல் பலமிக்கவை என்பதை நிருபிக்கிற தொகுப்பாகவும் உள்ளதை குறிப்பிடவேண்டும்.
        கவிஞனால் அதிகமாக எழுத முடியாதவையும் எழுந்த முடிந்தவைகளை நிர்ணயிப்பவை அனுபவச் செறிவுதான். வாழ்க்கையின் அனுப்பிடிகளும் சொர்க்க நினைவுகளும் காணவியலாத சகிக்கவிலாத காட்சிகளைப் பதனம் செய்வதும் கவிதையின் இருப்பும் கவிஞனின் அறிக்கையுமாக பதிவாகிறது. அதிகமான காட்சிகளைக் காண்கிறவன் அதிகமாக எழுதக் கிடைக்கிறது. பெருநகரின் பலவிதமான காட்சிகள். தூசிகள், தினமும் கணத்தில் கடந்து கொண்டே போகிற வாகனங்கள். சக்கரங்கள் உருவான பொழுதிலேயே அலைக்கழிப்புகள் உருவாகிவிட்டதாகவே மனிதனின் வாழ்வும் அலைக்கழிப்பிலேயே உழல்கிறது. தேவையான பொருட்கள்  தேங்கிக்கிடந்தபோதும் மீண்டும் மீண்டும் இருப்புக் கொள்ளத்தேடிப் போகிறதாகவே மனித உடலின் பரபரப்பு இந்த கடப்பாடு எனலாம். கவிஞர் நிஷா மன்சூர் கவிதைகளில் பல காட்சிகள் மேற்கண்ட வலிமையின் தீவிரத்தைப் பேசுகிறது. மனிதன் தன் உணவுக்காகவோ அல்லது பரந்து பட்ட உலக இயக்கத்தை தனக்கான உணவைத்தேடுவதோடு உலகின் வரைபடத்தைக் காண எத்தனிக்கிறான் எனவும் இக்கவிதை வாயிலாக அறியமுடிகிறது. ஒரு வகையில் வாசகன் உள்ளிட்ட எல்லா மனித இரைப்பையும் இப்படியாகவே அலைகிறது.
நீ இரைத்துவிட்ட
எனக்கான உணவைப் பொறுக்க
நாடெங்கிலும் பறந்து கொண்டிருக்கும்
எளிய பறவை நான்---
        முதல் விதை அல்லது ஒரு பிரகடனம். பாரதி சொன்னது நினைவுக்கு வருகிறது “உணவு இயற்கை தரும் உமக்குத் தொழில் அன்பு செய்தல் கண்டீர்..“ ஒரு மெல்லிசையில் வீணைக்குக் கூட சில நொடிகள் தான் கிடைக்கிறது அந்தப் பாடலுடன் தன் பிரச்சனைகளையும் பேசிக் கொள்வதற்கு. பிறகு உறைக்குள் சென்று மௌனமாக உறங்கிவிட்டு பிற்பாடு எப் போதோ மறுபடியும் சில கணங்களுக்குக் காத்திருப்பது போல.
        நவீன காலத்தின் சித்திரங்களை தன் இருபதாண்டுகளின் கவிதைகளிலும் பேசியிருக்கிறார். சிறுபத்திரிக்கைகளில் எழுதப்பட்ட கவிதைகளிலும் சொற்களின் அளவும் நெடிய அனுபவமும் பதிவாகியிருக்கிறது. ரசனையும் அனுபவமும் பல கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் ஒன்றாக ஏற்பட்டு விடுவது தவிர்க்க முடியாதவை. சொல் முறையிலும் பகிர்ந்து கொள்வதிலும் சற்று வேறுபடுத்திக் காட்டும் போது அக்கவிதை நமக்கு சில நுட்பங்களை விவரிக்கிறது.
       பொதுவாக நவீன கவிதைகள் எழுதி வருகிறவர்கள் குறிப்பிடுபவர்களில் முக்கியமானவராக நகுலன் உள்ளார். அவர் பற்றிய கவிதையொன்றாவது இடம்பெற்றுவிடும். நகுலனின் எண்பதாண்டு வாழ்க்கை மட்டுமல்ல இந்த நவீன காலத்தின் தனிமையும் அவர் காலத்தின் தனிமையும் இணைவதாகவே பொருளாகிறது. திரும்பத்திரும்ப எளிமைக்குள் நுழைய எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகள்தான் நவீன கவிதையின் இயல்பு இனி நிஷா மன்சூரின் நகுலன் கவிதை
கோல்ஃப்லிங்க் சாலைக்குழந்தை
ஆளரவமற்ற
தனிமையின் பூதம் ஆட்கொண்டிருந்த
தன் வீட்டு வாசலைப் பார்த்து
நகுலன் சொன்னார்
“இந்த வாசலில் ஏன் இத்தனை செருப்புகள்...
அதிலும்
குழந்தைகளின் குட்டிக்குட்டிச் செருப்புகள்
ஒற்றைப் பூனை என் முகம் பார்த்து
“மியாவ்“ என்றது..
         வெள்ளிக்கிழமைகளில் மறக்காமல் பள்ளிவாசல் செல்கிற இஸ்லாமியர்கள் சிலர் காலதாமதாக வருகிற பொழுது அவர்களின் வாகனங்களும் கால் செருப்புகளும் விடப்பட்டிருக்கிற வாயில்கள் நமக்கு நினைவுக்கு வருகிறது. மனித இருப்புகளை சதா நினைவுட்டி அறிவித்துக்கொண்டிருக்கிற படிமங்களாக இந்த செருப்புகளின் அடையாளங்களை நாம் காண்கிறோம்..
        ஒருவர் பல சோடி  செருப்புகளை உபயோகப் படுத்தினால் கூட இல்லாத சோடி செருப்புகளின் வழியாக அவர் எவ்வளவு தொலைவு எப்படியான முக்கியமான பணிக்குச் சென்றிருப்பார் என்பதையும் நாம் அறிய முடிகிற கவிதை..
        எனக்குத் தெரிந்து நண்பர் ஒருவர் சில ஆண்டுகளுக்க முன்பு  ஆளரவமற்ற பகுதியில் வீட்டு மனை வாங்கி வீடு கட்டிக் குடியிருந்தார். அவர் அச்சம் போக்குவதற்கு வீட்டின் முன்பாக பல சோடி செருப்புகளை பலவாறு நிறுத்தி வைத்து தன்னுடன் நிறையப் பேர் குடியிருக்கிறார்கள் ஆகவே திருடர்களே நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள் என்று ஊருக்கும் உலகிற்கும் தன் குடும்ப மனதிற்கு ஆறுதலாகவும் இந்த செருப்புகளை வைத்த காலம் நினைவுக்கு வருகிறது.
கவிஞர்களுக்கே உரிய இயற்கை நேசம் இவரது கவிதைகளிலும் வெளிப்பட்டிருக்கிறது. முக்கியமாக இவர் கவனப்படுத்தியிருப்பது பவானி மற்றும் ஆறுகளுக்குள் கழிவுகள் கொட்டப்படுவதைக் குறித்த கவிதைகள் முக்கியமானது. அந்த நிலச்சரிவு குறித்த கவிதை சர்வதேச தரமிக்க தமிழ் கவிதை எனலாம். மழைக்கால ங்களில் நிலச்சரிவுப் பகுதிகளில் வாழ்கிற மலையக மக்களின் வீடுகள் பாதைகள் பற்றிய அச்சம் நமக்கு வருகிறது. நாம் செய்திகளாக அறிந்து ச்ச்சொ கொட்டிக் கொள்கிற காட்சிகள் கவிதையாக வந்திருப்பது முக்கியம். 1994 வாக்கில் நடைபெற்ற ஊட்டி நிலச்சரிவில் பேருந்து புதைந்து போன காலத்தை நினைவுட்டுகிற கவிதை அது. அதன் சொற்களில்
யாரோ ஒருவனின் சதையைத்தின்று
வளர்ந்திருக்கும் செடியில்
ஒரு மஞ்சள் பூ பூத்திருக்கிறது—என்கிறார்.
         இந்த வாழ்க்கையில் நம்முடன் தவிர்க்க முடியாது வியர்வையைப்போல உடனிருப்பது பொய். பொய் சொல்வது வேறு..கற்பனை என்பது வேறு கற்பனை உரைகள் பொய்களில் அடங்காது. எனினும் நம்மால் இந்த யுகத்தில் பொய் சொல்லாமல் வாழ முடியாது. குறிப்பாக அலைபேசிகளில் பொய் இல்லாமல் பேசாமல் வாழ்வது சாத்தியமில்லை. அரிச்சந்திரன் இந்த யுகத்தில் பிறந்து அலைபேசியில் பேசுவானெனில் சத்தியமாக அவனால் பொய் பேசாமல் இருக்க முடியாது என்பதே பொய்யற்ற உண்மை. பொய் பொருந்தி விடுகிற பொழுது கவிஞனின் ஆற்றாமை படும் துயரம் அவஸ் தையானது. தவிர்ப்பையும் தவிப்பையும் நியாயப்படுத்த நம்மிடம் பொய் தவிர வேறொன்றுமில்லை.
“ஒரு ஆத்மார்த்தமான பொய்யை
அழகாகச் சொல்கிறேன்
எனினும்
அந்தப் பொய்க்கு உண்மையானவனாக
ஒருபோதும் இருக்க முடிவதில்லை..
       இந்தக் கவிதை நாம் பேசும் பொய்க்கு ஆறுதலாக இருக்கிறது. நம் இருப்பை மாற்றி அறிவிக்கிறோம். நம்முடன் இருக்கும் நபரை அகற்றுகிறோம். எத்தனை அழிப்புகள் கணத்தில் நிகழ்கிறது பொய் வழியாக..
        நிஷா மன்சூர் சமீபத்திய இலக்கியச் சந்திப்பின் நிகழ்விற்கு பங்கேற்பாளர்களுக்காக வர்க்கிகள் அடங்கிய பெரிய பாக்கெட்டுகள் கொண்டு வந்தார். அதுவரையிலும் இலக்கியக் கூட்டங்களுக்கு பலவகை பலகாரங்கள் சாப்பிட்டு இருந்தாலும் வர்க்கி வந்து சாப்பிட்டது புதுவிதமான உணர்வைத் தந்தது என்றார்கள் பங்கேற்றவர்கள். அவர் மேட்டுப்பாளையம் ஆதலால் அவருக்கு ஒரிஜினல் வர்க்கிகள் கிடைக்க வாய்ப்பு அதிகம். நிகழ்வு முழுக்க வர்க்கியின் சுவை நாக்கில் கூடவே இருந்தது இந்தக் கவிதையை வாசித்த பிறகு காலமெல்லாம் கூடவே வரும் போலிருக்கிறது. அ.முத்துலிங்கத்தின் கதையொன்று “சீனி தூவிய மொற மொற பிஸ்கட்“ என்னும் சொலவடை புகழ்பெற்றது. மகாராஜாவின் ரயில் வண்டி கதையில்.  வர்க்கித்தூளுக்குப் பின்புலம் குறுங்காதையாக விரிகிறது
தமிழின் மிக முக்கியமான நெடுங்கவிதையெனலாம்..
பசிக்கு
வர்க்கித்தூள் வாங்கிச் சாப்பிடுவேன் பஸ்ஸில்
ஒரு ருபாய்க்குக் கைநிறையக் கிடைக்கும்
பிரித்து விட்ட ஸ்டேப்ளர் பின்னுடன்
சிலசமயம்
வழுக்கி விழுந்த நிலவு போல
முழு வர்க்கியும் வந்து விழும்......
         இறுதியில்
இன்று
நண்பன் வீட்டு உபசரிப்பில்
வர்க்கித்தூள்
“நீயெல்லாம் சாப்பிடுவாயா..? கேள்வியுடன் பரிமாறல்
திரும்புகையில்
அப்போதே போல் ஏப்பம்
வர்க்கி ஏப்பத்திற்கு
எப்பவுமே தனிவாசனை....
         1997 வாக்கில் மேட்டுப்பாளையத்தில் நிகழ்ந்த ஒரு மதவெறிக் கொலையில் கொல்லப்பட்ட சிறுவனை அடக்கம் செய்து விட்டு வந்து எழுதப்பட்ட ஒரு கவிதை இன்று உலகின் பல மூலைகளில் நிகழ்ந்து வரும் இனப் படுகொலைகளின் பின்னணியில் உள்ள உளவியலைப் பேசுகிறது..
ஏழுவயதிற்கும் கீழுள்ள
சிறுவன் நிற்கிறான்
கைகட்டி
தலைகுனிந்து
அவனுக்கு முன்னேயும்
பத்திகள் புகைகின்றன..
தளர்ந்த
உள்ளிருந்த சமாதிகளில்
வாசமில்லா
அழகில்லா
பூக்கள் மலர்ந்திருக்கின்றன..
         தொகுப்பில் உள்ள பல கவிதைகள் பல பக்கங்களுக்கு மேற்கோள் எடுப்பதற்கு உகந்ததாகவே தென்படுகிறது.  கவிதை வாசகர்களின் ரசனை அனுபவத்திற்கு விட்டு விடுகிறேன்.. நூலில் நீங்கள் ஆழ்ந்தால் கிட்டுகிறவை. அவர் குறிப்பிட்டிருக்கிற இஸ்லாமிய தொன்ம வாசகமான “ஒவ்வொரு மண்ணறையிலிருந்தும் கிட்டத்தட்ட ஒன்றேகால் லட்சம் மனிதர்கள் எழுப்ப படுவார்கள்..“ அப்படித்தான் இந்த தொகுப்பின் கவிதைகளும். உலகின் எல்லா உயிரிகளும் தன் அபிலாஷைகளை அனுபவிக்க ஏதாவது ஒரு அளப்பரிய தியாகத்தை முன்வைத்தே வாழ்கிறது என்பதை இந்த கவிதை நூல் முன்வைக்கிறது. தமிழ் கவிதையின் கட்டமைப்பும் கோருகிற யாசகங்களும் அதுவே ஆகிறது.. அவசியம் வாசியுங்கள்...
இப்பொழுது இறுதியாக மீண்டும் கவிதைகளுக்கு திரும்பியிருகிற கவிஞர் நிஷாமன்சூருக்கு வாழ்த்துக்களுடன் அவர் கவிதையின் சில வரிகளுடன்
மௌனகோஷம் எழுகிறது
“உங்களுக்கு உங்கள் மார்க்கம்
எங்களுக்கு எங்கள் மார்க்கம்..“ இறைமறை வசனம்-109.6
கவிதையின் பக்கம் –48
“நிழலில் படரும் இருள்“
கவிதைகள் –ஆசிரியர்- நிஷா மன்சூர்
வெளியீடு- பக்கங்கள் 72- விலை ரூ 80
மலைகள்
119 முதல்மாடி
கடலூர் மெயின் ரோடு
அம்மாபேட்டை சேலம்-636003

    


























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக