ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

“காக்கா முட்டை” திரைவிமர்சனம் நன்றி 00கொலுசு மின்னிதழ்...

காக்கா முட்டை- திரைவிமர்சனம்-
இதுவரையிலான நடந்த உரையாடலை முன்வைத்து-
         காக்கா முட்டை படம் குறித்து மிக விரிவாகப் பேசப்பட்டு விட்டது. உண்மையில் ஒரு மிகச் சாதாரணமான படமாக இருந்த நிலையை தேசிய விருது அறிவிப்புகளும் இந்தப் படத்தை வாங்கிய வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியினர் செய்த பரவலான போஸ்டர் விளம்பரங்களும் இந்தப் படத்தை  வணிக அடிப்படையிலும் வெற்றிப்படமாக மாற்றியிருக்கிறது.
       மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெகுசன மக்கள் கண்டுகளித்த கலைப்படம் இதுவாகத்தான் இருக்கும். வெகுசன மக்களுக்குக் கலைப்படங்கள் மீது இருந்த அச்சத்தை இந்தப்படம் போக்கியிருக்கிறது என்றும் சொல்லலாம்.
        காக்கா முட்டை படத்திற்கு இணையதளங்கள் உள்பட வேற்றுமை பாராமல் ஆதரவு அளித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். அநேகமாக ஒட்டுமொத்த ஆதரவை காக்கா முட்டை படத்திற்கு கிடைத்திருக்கிறது. கருத்தொற்றுமையுடன் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டது போன்ற நிலை அமைந்திருக்கிறது.
         ஒரு முக்கியமான படம் எந்தெந்த வழிகளில் கொண்டாடப்படும் என்பதை அறிந்து கொள்ளவும் இந்தப் படத்தின் வெற்றி அமைந்திருக்கிறது. எளிமையான படங்களை குறைந்த அளவு பொருளாதாரச் செலவில் படங்களைத் தரமுடியும் என்னும் நம்பிக்கையை தற் பொழுது ஊடகவியல் காட்சி ஊடகவியல் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நம்பிக்கையும் அளித்திருக்கிறது.
       படத்தின் கதையை மிகச்சுருக்கமாகச் சொல்லிவிடக் கூடியது. இன்றைய மிக நிரப்ப பட்ட உணவுக்குவியல் உள்ள நம் நாட்டில் ஒரு சிறுவனின் எளிய விருப்பம் நிறைவேற்றப்படுகிறதா என்பதுதான். இதற்காகத் இயக்குநர்  மணிகண்டன் எடுத்த முயற்சிகள் தான் படத்தின் களம். பெருநகரங்களின் ஓரத்தில் கழிமுக கழிவு ஓர வாய்க்கால்களில் பாசனம் பிடித்த ஏரிகளில் வாழ்கிற எளிய மக்களின் வாழ்க்கையும் கூடவே வருகிறது. இந்திய சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் கடந்தும் இன்னும் இந்தியப் பெருநகரங்களின் அருகில் வாழ்கிற மக்களின் வாழ்க்கைகளும் எளிய ஆசைகளும் தீர்க்கப்படுகிறதா என்பதே கேள்வி.
       படப்பிடிப்பின் களங்கள் தமிழ் சினிமாவிற்கு பழசு என்றாலும் மணிகண்டனின் பார்வை முழுக்கவும் கலையும் மனிதாபிமானமும் சார்ந்த வெளிப்பாடுகள். இரண்டு சிறுவர்களுடன் உள்ள தாய் அவளின் கணவன் சிறையில். அச்சிறுவர்களுக்கு பிட்சா சாப்பிடும் ஆசை வருகிறது அந்த ஆசை நிறைவேறுகிறதா என்பதே படம் என்று அவர் சொன்ன கதையை யார்தான் படமாக்க முன்வந்திருப்பார்கள். படத்தைத் தயாரித்த இந்த வாழ்க்கையின் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகதஸ்கரும் பாராட்டுக்குரியவர்கள்.
         படம் வெளியான சில நாட்களில் எதிர்மறையான விமர்சனங்கள் வெளியானது. சில முக்கியமான கருத்தியலாளர்கள் இந்திய ஏழ்மையை விற்றுப் பணம் பார்க்கும் குயுக்தி என்றெல்லாம் பேசினார்கள். நம் உரையாடலில் கலை குறித்துப் பேசும் போது ஏழ்மையை மட்டம் தட்டுகிற தூய கலையமைய வாதிகள் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் காகிதப் புலிகள் எந்த நாளும் ஒரு அருகம்புல்லைக் கூட தன் வாழ்நாளில் கிள்ளியிருக்க மாட்டார்கள்.
    ஒரு வெகுசன மக்கள் ஊடகத்தை மக்களின் மேம்பாட்டிற்குப் பயன்படுத்துவதை எதிர்க்கிறவர்களின் கலை பற்றிய அறிவை நாம் சோதிக்கவேண்டியிருக்கிறது ஒரு உரையாடலில் ஒரு வசனம் “குப்பத்துப் பசங்கன்னு ஏன் சார் சொல்றீங்க..நம்ம பசங்கன்னு சொல்லுங்களே..படம் இதைத்தான் சொல்ல வருகிறது. கட்டாயக் கல்வி கட்டாய தமிழ் வழிக்கல்வி. தமிழுக்கு முன்னுரிமை என்றெல்லாம் பேசும் சமயத்தில் சிறார் கல்விக்கு முன்னுரிமையும் குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பும் அவசியத்தை இந்தப் படம் பேசுகிறது.
    இந்தியப் பொருளாதரச்சூழலில் இன்று ஒரு குடும்பம் சாப்பிடவேண்டுமென்றால் குடும்பமே பாடுபட்டுத்தான் சாப்பிடவேண்டியிருக்கிறது. ஏழ்மையில் இருப்பவர்கள் நிலையை நாம் சொல்லவேண்டியதில்லை. வறுமையைப் பேசத் துணிவதே நாம் கலைக்குச் செய்யும முதல் மரியாதை. அரசியலற்ற கலையின் அம்சத்தின் மேன்மை யான பகுதிகளை காக்கா முட்டை படம் எடுத்துரைக்கிறது.
     பீட்சா கடை முதலாளிகள் மற்றும் அடியாட்களை துவக்கத்திலிருந்து மக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டப்பட்டு பிற்பாடு படத்தின் இறுதியில் அவர்கள் நல்லவர்கள் அல்லது வியாபார உத்தியின் வெளிப்பாடு என்று மிக தைரியமாக ஒரு கலைஞன் பேசியிருக்கிறான் வணிகமயத்தின் ஊடுபாவுகளில் சிக்கும் எளிய உணவு ரசனை பற்றிய மையக்கருத்து நமக்குள் உரையாடுகிறது. விவாதங்களுக்கு பஞ்சமோ அறிவுரையோ இல்லாமல் இல்லை.
    படமாக்க முறைகளில் வணிக படத்தின் அம்சங்கள் தான் அதிகமாகத் தென்பட்டது. பின்னணி இசையின் இறைச்சல்கள். வாகனங்களின் சத்தம். தேவையில்லாத எதிர்பார்ப்பும் விறுவிறுப்புமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு சிறுவர்களும் அவர்களின் சிரிப்பிலேயே கலையின் எதார்த்தம் மின்னுகிறது. காணாமல் போன சிறுவர்களைத் தேடிக் கொண்டு வருகிற தாயைக் கண்டதும் “தோ அம்மாடா ..என்று ஓடிவந்து கட்டிக் கொள்கிற காட்சியின் இதுவரையிலுமான தமிழ் சினிமாவின் அம்மா பாசத்தை விடவும் உன்னதமான காட்சியாக அமைந்திருக்கிறது. வழக்கம் போல ஏழ்மை யைக் காசாக்குதல் எனும் விமர்சனம் வருகிறது. இந்திய தமிழ் சினிமாக்கள் குறித்து வருகிற  விமர்சனங்கள்தான்
     சத்யஜித்ரே, அடுர் கோபாலகிருஷ்ணன், மிருனாள் சென் “பசிதுரை, எம் ஏ காஜா போன்ற இயக்குநர்களுக் கும் இந்த விமர்சனம் வந்து போனது. இந்திய வறுமையை ஏழ்மையை பற்றாக்குறைகளை கலை என்ற பெயரில் வெளிநாட்டில் வெளிச்சம் போட்டுக்காட்டி தங்கள் மேதாவித்தன்தைக் காட்டிக் கொள்கிற கூட்டம் என்றார்கள் திரைப்படக்கலைஞர்களை...
எழுபதுகளில் பசி படம் ஏற்படுத்திய தாக்கம் சாதாரணமானது அல்ல.. இதே போன்ற சென்னையின் மற்றொரு மக்களின் முகத்தை அந்தப்படம் காட்டியது. பசி இயக்குநர் துரை ஷோபா உள்பட விருதுகள் மேல் விருதுகள் வாங்கி குவித்தார்கள். உலகிலேயே ரஷிய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாராட்டுத் தெரிவித்து பேசவைத்த திரைப்பட இயக்குநர் பசி துரைதான். தமிழ்த்திரைப்படம்தான் அந்த சாதனையைச் செய்திருக்கிறது. ஆனால் மணிகண்டனின் திறமை பற்றி இங்கு எந்த பெரிய அளவு மரியாதையும் கிட்டவில்லை.
        சமீபத்தில் மீண்டும் ஒரு முறை காக்கா முட்டை படம் பார்க்க வாய்த்தது. இடையிடையில் இரண்டு சிறுவர்கள் மற்றும் மணிகண்டனின் உரையாடல்கள் அடங்கிய பிரிமியர் ஷோ வும் பார்த்தேன். இப்படத்தின் ஆக்கங்கள் பற்றிய விரிவான உரையாடலை மணிகண்டன் தந்தார். சின்னவன் பாராட்டும் போது கூல் கூல் என்று மணிகண்டனைக் குத்தினான். பெரியவனை வாடா போடா என்றே அழைத்தான். தேசிய விருது பெற்ற செய்திகளைச் சொன்னபோது அவர்களுக்கு மகத்துவம் தெரியவில்லை. ஒரு வேளை அந்த விருதும் பீட்சா போல கொழ கொழவென்றுதான் இருக்குமோ என்று நினைத்திருப்பான் என்று நினைக்கிறேன். அவனுடைய அந்த சிரிப்புதான் படத்தின் மாஸ்டர் கிளாஸ் அப்பியரன்ஸ் என்று சொல்ல வேண்டும்..
சின்னவனிடம் கேட்டபோது “உன்னுடைய முதல் விமானப் பயணம் எப்படியிருந்தது விமானம் மேலே பறந்தபோது என்னவெல்லாம் உணர்ந்தாய்...“என்று மணிகண்டன் கேட்டபோது சின்னவன்
“ஏசப்பா...என்ன சீக்கிரம் அம்மா அப்பாகிட்ட கொண்டு போய் விட்ரு...என்று வேண்டி நடித்துக் காட்டி வெட்கப்பட்டான்....










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக