செவ்வாய், 6 நவம்பர், 2012

கரைந்த கீதம்


கரைந்த கீதம்

 

 

 

பாம்பே ஜெயஸ்ரீ சஹானாவில் ”வநதனுமு”

ஆலாபனையில் மயக்கிய போது

ஆலய அரங்கினுள் நுழைந்த நான்

இனம் புரியாத சுகந்தத்தில் கரைந்த என்னைத் தேட ஆரம்பிக்கிறேன்..

 

மாயா மாளவ கௌள ராகத்தில்

”மேருசமணா”வில் நிரவலும் ஸ்வரங்களும்

இசைக்கும் போது கேண்டீன் வளாகத்தில்

தேட ஆரம்பித்தேன்..

 

தாரஸ்தாயில் ஆரபியின் கிருதிகளை இசைக்கும் போது

இசைத்தட்டுகள் விற்குமிடத்தில் தேடினேன்..

யதிகுள காம்போதியில் ”ஜூடா முராரே”

கீர்த்தனைகளின் போது இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள்

நிறுத்துமிடங்களில் தேட ஆரம்பிக்கிறேன்..

 

தோடி ராக ஆலாபனையில் ”கதநீயனீ”-யாக

மயக்கியபோது- - அரங்கத்தின் கூரையின் மீதெல்லாம் ஏறி

தேடுகிறேன்..தேடுகிறேன்..கண்டடையக்கிடைக்க வில்லை நான்..

 

ஜெயஸ்ரீ தன் இசை வாத்யக் கலைஞர்களுடன்

ஓபல் கோர்சாவில் விமர்சையான வழியனுப்புதலுடன்

விடைபெற்றுக் கொண்டு கிளம்பிய  பின்னரும்

அரங்கம் முழுக்கக் காலியான பின்னரும் தேடியே

சலித்துப் போகிறேன்..

 

அரங்க இரவுக் காவலர் விசாரிக்கிறார்

”என்ன தேடுகிறீர்கள்..வெகுநேரமாக.. ஏதாவது

தங்க ஆபரணத்தைத் தொலைத்து விட்டீர்களா”

நான் சில உணர்வின் அடையாளங்களைச் சொல்கிறேன்..

அவரோ..

”இப்பதானே கார்ல போறாங்களே..பார்க்கலையா நீங்க..”

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக