செவ்வாய், 10 மே, 2016

கனிமொழி.ஜி கவிதைகள்

கோடை நகர்ந்த கதை- கனிமொழி.ஜி கவிதைகள் குறித்து
கவிதைகளைத் தன் குழந்தைகள் போல்
பராமரிப்பவரின் கவிதைகள்...

காலத்தின் கடைசி மந்திரம்

இறுதியாய் இந்தக் கானகம்
என் கட்டுப்பாட்டில் வந்து விட்டது
ஆக்கவும் இயக்கவும் மாற்றவும் மற்றவற்றிற்குமாய்
இனியிங்கு எதுவொன்றும் என் விருப்பம் --  பக்-22    

    வாழ்வு அளித்த பரிசுத்தங்களில் நுமக்கு சௌகரியமானவை  யெவை எனக் கேட்கும் பொழுது பற்பல சாத்வீகமான அசௌகரியங்களின் பட்டியல்கள் நீளும். விவரிப்புகளுக்கு அப்பாலும் கடலின் எல்லை நெளிந்து கொண்டிருப்பது போல கற்பனைத் தூண்டில்களை வீசிப்பார்க்கத் தோன்றும். மிக நெருக்கத்துடன் இறுகிக் கிடக்கும் தீராப் பிரச்சனைகளும் விலகியே போய்க் கொண்டிருக்கும் அட்சயப்பாத்திரமும் எழுதுகிறவர்களைப் பிடித்து உலுக்குகிறது. இசைக் கருவிகள் வாசிப்பவர்கள் தொடர்ந்து வாசிக்கிறார்கள். வெளியேறிக் கொண்டிருக்கிற மக்கள் வெளியேறுகிறார்கள்.
பகலும் இரவும்  வகைக் கொரு வெளிச்சங்களும் வகைக்கொரு கருங்கலுமாக இருவகைப் பொழுதுகளில் நீந்துகிறோம். தீராப் பசிக்கு இயற்கையின் ஓசையே இசையே ஆகாரமென வாழும் கோடினானுகோடி சீவராசிகளில் மனிதனும் ஒரு உயிரி.
          இருப்பைத் தன் சகவாசிகளுக்குத் தெரிவித்துக் கொள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட இசையே மொழியாகும். லட்சக்கணக்கில் பொழுதில் மசவெக்கையின் நிழலுக்கும் மாலையின் புழுதிக்கும் பறக்கிற வௌவால் குஞ்சுகள் தன் இனத்தையும் தாயையும் உடன்பிறப்புக்களையம் அது அறியும்.
     கவிஞனின் மொழியை கவிஞன் அறிவான்.கவிஞனை மனிதன் அறிவான். இச்சைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட கட்டளைத் தகர்க்கிற வழிகளை கவிஞன் அறிவான். கவிஞன் எல்லா ஒழுங்குகளையும் ஒழுங்கீனங் களையும் கலைக்கவும் கட்டுப்படுத்தவும் உரியவனாகிறான். கற்பிரதிகளிலிருந்தும் பாறைச் சித்திரங்களிலிருந்து கானுயிர்களின் வடிவங்களிலிருந்து மொழிச் சொற்களுக்கான வகைகளை வடித்துக் கொடுத்தான். மொழிச்சித்திரங்கள் அனைத்துமே மிருகவாசம் கொண்டவை.
      கனிமொழி.ஜி கவிதைகள் புலப்படுத்தும் காட்சிகளும் விவரிப்புகளும் சகலமும் பேசுகிறது. கோடை நகர்ந்த கதை மட்டுமல்ல வேனலையும் வெம்மையையும் சொல்கிறது. முந்தைய தொகுப்பான மழை நடந்தோடிய நெகிழ்நிலத்தில் மழைக்காலத்தின் நிலவியலைப் பிரதியாக்கினார். இத்தொகுப்பில் கடற்பகுதிநிலங்களின் தகிக்கும் வெம்மையை அகச்சித்திரங்களின் வழி தனலைப் பேசியிருக்கிறார்.
இரவு

பொழுதின் கூர்மை முற்றிலும் முடமாகி
விழும் கதிரின் ஒளிர் விளிம்புகளோடு
உருமாறும் முகிற்செறிவில் விரிகிறது
இரவு குறித்த ஒரு மாயச்சித்திரம்

உலர்ந்த தென்னை மட்டையொன்று
பிடிப்பிழந்து விழுந்த சத்தத்தில்
உடைந்த விரிசல் வழியே
மெல்ல வெளியேறுகிறது இவ்விரவு-  பக்17

         கனி யின் இக்கவிதை பல நூறு இரவுச்சித்திரங்கள் பேசும் “மணிமேகலை“காப்பியத்தின் சில கவிதைவரிகளை நினைவு கொள்ள வைத்தவை.

ஏஉறு மஞ்ஞையின் இனைந்து,அடி வருந்த,
மாநகர் வீதி மருங்கில் போகி,
போய கங்குலில் புகுந்ததை எல்லாம்
மாதவி-தனக்கு வழு இன்று உரைத்தலும்-
நல்மணி இழந்த நாகம் போன்று,அவள்
தன்மகள் வாராத் தனித் துயர் உழப்ப,
இன்உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள்,
துன்னியது உரைத்த சதமதி-தான்-என்
( துயிலெழுப்பிய காதை)
 ( சதமதி அம்படிப்பட்ட மயிலைப் போல் நெஞ்சம் நைந்தாள். தன் மெல்லிய அடிகள் வருந்துமாறு புகார் நகரின் பெருவீதிகள்வழியே சென்று மாதவியை அடைந்தாள். சென்ற இரவில் நடந்ததையெல்லாம் அவளிடம் வழுவாது கூறினாள். தன்னுடைய மகளான மணிமேகலை திரும்ப வாராததால் மாதவி பெருந்துன்பம்  அடைந்தாள். நல்ல மணியை இழந்த நாகத்தைப் போல வருந்தினாள் மணிமேகலைக்கு நேர்ந்ததை உரைத்த சதமதி இழந்த உடலைப் போல அசைவற்று நின்று கொண்டிருந்தாள் )
        கனிமொழி.ஜி கவிதைகளில் முழுக்கவும் வெப்பவியல் நிலங்களின் வெம்மையும் உம்மையுடன் இருக்கிறது. தன் கையில் எப்பொழுதும் சிறு தூண்டிலொன்றுடனே வாழ்வதான கனவிலும் எழுத்தில் கவிதையில் புனைவையும் இணைத்துக் கொள்கிறார். தற்பொழுது தான் வாழும் கடற்கரையோரங்களில் உப்பளங்களும் உவர்ப்பு மிகு நிலத்து மனிதர்களின் உணர்வுகளுமாக அமைந்திருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுதும் சமயத்தில் மீன்பிடி தடைகாலத்திற்கான ஓய்வில் மீனவர் சமுதாயம் தங்கள் சிறு கப்பல்களையும் படகுகளையும் கரைகளில் நாங்கூரமிட்டுவிட்டு ஓய்விலிருக்கிறார்கள். கோடையில் கடற்கரைகள் கடும் வெம்மையுடன் தகிக்கும். எல்லா நதிகளும் அணைக்குள் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. நதிகள் வந்து கடலில் கலக்கிற காலத்திற்காக காத்திருக்கிற கடலும் உவர்ப்பின் வழி ஊத்துப் பொருமி குடிநீராகிற கடல் நீரை அருந்துவதான கவிதை ஒன்று..கனிஜி கவிதைகள் புறம் பேசும் நிலப்பரப்பு குறித்தவை..
நதியருந்தும் கடல்

தீராவேட்கையுடன்
நீந்தி வருகிறதோர் நீரரவம்
நிதானமாய்ப் பற்றி அருந்துகிறது
நிலப் பெருங்கடல்----பக் 39
       வேனல் காலத்தில் பேசப்படுகிற கவிதைகள் குளிர்விக்க வேண்டிய அவசியமில்லை. இலையுதிர்காலத்திற்கு முந்தைய வேகையால் கறுகிக்காய்கிற மரஉச்சி இலைகளின் வாழ்வை பேசுகிறது உலக கவிதை ஒன்று..
ஏப்ரல்- நான்சி மோர்யான் (கியுபா)

வானத்தின் அடியில் பறக்கும் அந்த இலைகள்
எங்கள் தேசத்தின் தாய்மொழி
சூறாவளியின் பகைமையான சோர்வை
சுவாசிக்கும் இந்தப் பறவைகள்
அறியும். எல்லா ஆக்ரமிப்புகளையும்
கட்டவிழ்த்துவிடுவது ஏப்ரல்மாதம் தான் என்பதை
என் ஜன்ம பூமியே
கடலோரத்தில் கடுஞ் சீற்றத்துடன் நிற்கும் உன்னை நான்
காண்கிறேன்
நான் நடக்கும் இந்தப்புழுதி நிலம்
உன்னதமான பொதுத்தோட்டமாகும்
நாம் போரில் இறந்தால் மீண்டும்
நம் எலும்புகள் மணல் மீது உயிர்த்தெழும்
முன்நோக் முடியாத ஏப்ரல் மாதத்தில்
இயற்கைபோல் தூங்கும் இந்தத் தீவில்
நமது ஆவிகள் தங்கி வாழும்
இந்த தொகுப்பிலும் நிலங்களின் பல்வகைத் தரைகளின் கவிதைகள் உண்டு. நீள் கவிதைகளுக்குள் உள்ளாற ஓடும் சில வரிகளில் வாசிக்க அமைகிறது.

முத்தத்தின் வாசனை

வெம்மை இறங்கும் இம்மாலையில்
நசுங்கிய புல் வரப்பில் அமர்ந்து
அவள் நாசியை நினைவூட்டும்
வெள்ளை நிற எள்ளுப்பூ ஒன்றைப்
பிய்த்து முகர்கிறான்
எங்கோ இருக்கும் அவனை
ஒரு முத்தத்தின் வாசம் சூழ்கிறது... பக்-55

        இந்தக் கவிதை அகநானூற்று செவ்வியல் சங்க கவிதைகளின் காலத்தை நினைவு கொள்கிறது. எள் மலர் பற்றிய பதிவு ஆச்சர்யமாக உள்ளது.

வருவர் என்று உணர்ந்த மடங்கெழு நெஞ்சம்
ஐயம் தெளியரோ, நீயே பலவுடன்
வறன் மரம் பொருந்திய சிள்வீடு உமணர்
கணநிரை மணியின் ஆர்க்கும் சுரனிறந்து
அழிநீர் மீன்பெயர்ந் தாங்கு அவர்
வழிநடைச் சேறல் வலித்தி சின் யானே- அகநானூறு...

(அப்பறவைகள் போல), அவர் திரும்பி வருவார் என எண்ணும் அறிவற்ற நெஞ்சமே ஐயம் நீங்கித் தெளிவாயாக! வறண்ட மரங்கள் அடர்ந்த இடத்தில் சிள் வண்டுகள், உமணர்கள் வண்டியிலுள்ள மணிகள் போ ஓசையிடும் பாலை வழியைக் கடந்து நீர் அற்ற இடம் விட்டு நீர் உள்ள இடத்திற்கு மீன்கள் போவது போல, அவர் சென்ற வழியே  நடத்தலை நான் துணிந்துள்ளேன்..

     கனிமொழி.ஜி இரண்டாவது கவிதை நூல் இது. ஐம்பத்தி நான்கு கவிதைகள். சிலவை நீள் கவிதைகளும் காட்சிகளும் உண்டு. குறுங்கவிதைகளும் சிள் ஆச்சர்யங்கள் காட்டும் கவிதை வரிகளும் உண்டு. பற்பல பொருள் பேசும் உள்ளடக்க விவரிப்பு கொண்ட கவிதைகளும் உண்டு. நான் குறிப்பிடாத சிறப்பு மிக்க கவிதைகளான தேசமெங்கும் பெருமரங்கள், காலக் கடிகாரங்கள், கூடற்காலம், குறிஞ்சி நிலக்குருவி யொன்று, வலியின் நிறம், ஒரே வாகனம் உள்ளிட்ட கவிதைகளில் கவிஞரின் கற்பனை வளம் சாத்தியமாகி யிருக்கிறது. மிக நேர்த்தியாக முடிந்து விடாத சம்பவங்களும் கைநழுவிப் போய்விடுகிற அற்புதமான இயற்கை வாய்ப்புகளும் கவிஞனின் சொற்களாகிறது. அகச் சட்டகங்களுக்குள் புறவயப்பட்ட கட்டளைகள்தான் கவிதைகள் என்கிறார் கவிஞர். ஏமாற்றங்களிலிருந்து தனக்கான ஒரே ஓர் எள்ளுப்பூவைப் பறித்திருக்கிறார் கவிஞர்.. மேலும் பற்பலக் கவிதை நூல்களுடன் வலம் வருவாராக என..
வாழ்த்துக்களுடன்
இளஞ்சேரல்


வெளியீடு

கோடை நகர்ந்த கதை
கவிதைகள்- ஆசிரியர் கனிமொழி.ஜி

விலை ரூ 75-
உயிர்மை பதிப்பகம்
11-29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்

சென்னை 18

1 கருத்து:

  1. இக்கொடுங்கோடையை ஊடறுக்கிறது உங்கள் சொற்கள்... அன்புக்கு பதிலியாய் என்ன தருவேன் .. மேலும் மேலும் அன்பையே பகிர்ந்துகொள்வோம்.... எப்போதும் உங்களோடு பயணிப்பதில் மிகுந்த பெருமிதமாகிறேன்...

    பதிலளிநீக்கு