சனி, 22 ஆகஸ்ட், 2015

கந்தர் கோலம்- சிறுகதை

கந்தர்கோலம்
சிறுகதை- இளஞ்சேரல்
       
அவ்வளவு வேகமாக வண்டி ஓட்டத்தெரியாது அவனுக்கு. ஏற்கெனவே காட்டுப் பொதிப் புதர்களுக்குள் ஓட்டுவது போலத்தான் இருக்கிறது. அந்தப் பொந்திலும் சில குழிகள். பின்னால் அமர்ந்திருக்கிற கமலி செகண்டுக் கொரு தரம் “பார்த்து..பார்த்து..“ என்கிறாள்.புது வண்டி புது மனைவி..ஒவ்வொரு நாளும் புத்தம் புதியதாக மாறிக் கொண்டிருக்கும் காலம்..
பொழுது சற்றேரக்குறைய சாயும் நேரம். இருமருங்கிலும் இருக்கும் சொற்ப மரங்களுக்குப் பறவைகள் வரத்துவங்கி விட்டது. போக்குவரத்து நெரிசலும் தேங்கிய மக்களையும் கண்ட காகங்கள் கா காவென அச்சத்துடன் கரைகிறது. காலையிலேயே நினைத்தான் இன்று மாலை அலுவலகம் முடிந்து வரும் போது இந்தப் பாதையில் வரக்கூடாது என்று. அப்பொழுதுதான் தோண்ட ஆரம்பித்திருந்தார்கள்.
      எதிரில் வரமுடியாத பொந்தில் எப்படியோ ஒரு டாங்கர் லாரி வந்து கொண்டிருக்கிறது. அவனுக்குப் பின்னால் எட்டிப்பார்த்தால் அந்த நீள் மண்பொந்தில் வாகனங்களின் நெடிய வால்  பக்கத்தில் காங்கிரிட் மிக்சிங் கலவைகளின் சத்தம் வேறு. எங்கும் சிமெண்ட் தூசி. சிமெண்ட் கலவைகளின் ஈரமிக்க  நெடியும் சகதியும் வண்டிச் சக்கரங்களை வழுக்கச் செய்கிறது.
       இந்தப்பாதையைத்தவிர வேறெதுவும் இல்லை. நல்ல சௌகரியமான பாதையாக இந்தச் சாலையை விடுத்து மற்ற வழியைத் தோண்டிக் கொண்டிருக் கிறார்கள் பல மாதங்களாக..சாலைகளைத் தோண்டாத நாளில்லை சுடர் மிகு வடிவேலா.. இன்பமும் துன்பமும் நிறைந்த இவ்வாழ்வில் ஈடில்லா குழிகள் என்று தினமும் நான் பாட அன்பும் அறனும் சகதியில் விழ என்று டிஎம்எஸ் கதறிக் கொண்டிருக்கற  பாடல் லாரியில் ஒலிக்கிறது.
        அவனுக்கு முன்னால் பிளசர் ஒட்டிய மங்கை கோதுமை நிறத்தில் இன்ஞ் இன்ஞ்சாக அருகில் நெருங்கி நெருங்கி பிரிந்தாள். சில சமயம் அவன் கால்களில் உரச சாரி என்ற படியே காலம் போய்க் கொண்டிருக்கிறது.  சில இளைஞர்கள் ஆய் ஊய் என்றார்கள்.. அத்தனை நெருக்கத்துடன் வண்டியை நகர்த்துவது சர்க்கஸ்தான். அவன் அவளைப் பார்ப்பதைப் பார்த்துத் தொலைக்க கமலி வண்டியப் பார்த்து ஓட்டுங்க..என்றாள்.
        தற்சமயம் போக்குவரத்தைச் சரிசெய்ய வந்த சில வாலண்டியர்கள் அல்லது அந்தப் பகுதிக் காரர்கள் லாரியை அங்கிட்டே நிறுத்தச் சொன்னார்கள். ஸ்டாப் ஸ்டாப்.. என்றபடியே ஒரு தடுப்பு போட்டார்கள். நேர்கிற சிறுசிறுவழியையும் ஒரு இருசக்கர வாகனம் வந்து நின்று அடைத்துக் கொள்ள அவர்கள் “அடப் போங்கய்யா.. எவனய்யா கொஞ்சம் நில்லுங்கன்னா கேட்கறீங்க...“
அவனுக்கு அப்படா என்றிருக்கிறது. அவ்வப் பொழுது அந்த மங்கையின் டிசர்ட்டை கவனிக்காமல் இல்லை. கமலி மேலும் சௌகரியமாக அமர்ந்து கொண்டாள். அப்பொழுது பின்னால் ஒரு ஆம்புலன்ஸ் ஒய் ஒய்ய் என்று கதற ஆரம்பிக்கிறது. அதே போல ஆங்காங்கு சைரன் ஒலிகள்.
காலையிலிருந்து உருவிய கோழி கழிசடைகள் ஏற்றிய டிவிஎஸ் பிப்டிகாரர்கள் நறுமணம் பரப்புகிறார்கள். அந்த வண்டியைப் பாலோ செய்தபடியே காகங்கள் அவன் தலைக்கும் மேல் காகாகாகா எனக் கூவுகிறது
        பகுதி மக்களில் ஒரு சிலர் மேலும் வழியைச் சரிசெய்ய முயல்கிறார்கள். ஒரு சேர ஒலிப்பான்கள் கதறுகிறது வழிவிடவேண்டி. அவன் வயது ஒத்த இளைஞன் ஒருவன் வழி வழி என்று வந்தவன் அந்த மங்கையை கன்னம் தடவி எதிர்பாராத வண்ணம் வெளிரென்ற மார்பில் முத்தமிட்டுவிட்டு நகர்ந்து போனான். கூட்டம் அதிர்ச்சியில் உறைய அவன் மேலும் வழி வழியென்று நெரிசலில் கலந்து போனான்.
அந்த மங்கை..ஓ...ஓ... முகத்திலடித்தபடியே பாஸ்டார்ட் எனக் கூச்சலிட்டாள்.. அதற்குள் அம் மங்கைக்கு நேர்ந்த கதி நெரிசலில் இருந்த மக்களுக்கு துரித செய்தியானது.
ஹேய்ய் எனக் கூவிய இளைஞர்கள் அவனைப் பிடிக்கப் பாய்ந்தார்கள். வண்டிகள் நெருக்கடிக்குள் நெருக்கடியில் ஒன்றாக கவிழ்ந்து கிடக்கிறது. அவனைத் துரத்திக் கொண்டு போகிற சமயத்தில் வண்டிகளில் பாதைகளுக்கு காத்திருந்த மங்கைகள் சிலரை அவர்களும் முத்தமிடத் துவங்கினார்கள்.
கூச்சலும் குழப்பமும் ஆம்புலன்ஸ் சத்தமும் அந்த மணற் பொதிச் சந்தைப் பதற்றமடையச் செய்கிறது. அந்த டாங்கர் லாரி கொஞ்சம் கொஞ்சமாக முன்நகர்ந்து வருகிறது. போக்குவரத்து சரிசெய்தவர்கள் கலைந்து போனார்கள். காவல்துறையினர்கள் அந்த நெருக்கடிகளுக் குள்ளாக வந்த பிறகு மேலும் களேபரமானது. அவன் அருகில் சிவனேனென்று நின்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலருக்கு பளார் பளாரென்று அறைவிழுக.. இளைஞர்களாக இருப்பவர்களுக்கு சரிமாரியாக தடியடி விழுகிறது. காவலர்கள் இருளில் கண்மண் தெரியாமல் அடித்தபடியே முன்னகர்கிறார்கள்..
மருத்துவமனைகள் அதிகமான பிறகு நோய்கள் அதிகமானது. ஆம்புலன்ஸ்கள் அதிகமான பிறகு விபத்துகள் அதிகமானது. பொக்லைன்கள் அதிகமான பிறகு சாலைகள் சேதமடைந்து போனது. மங்கைகள் அதிகமான பிறகு குற்றங்கள் அதிகமானது. என்றான் ஒரு பழங்கிழவன் அம்மங்கைக்கு நேர்ந்த கதிகண்டு..
அவன் கன்னத்தைத் துடைத்துக் கொள்கிறான். மங்கை முகம் பொத்தி அழத்துவங்கியதை நிறுத்தி நடந்தவற்றை விளக்கினாள். அதிகாரி தன்னை மறந்து எங்கே என்று முகம் திருப்பிப் பார்த்தபோது அவன் தந்து விட்டுப் போன முத்தம் கீழே உதிர்கிறது.
         ஆம்புலன்ஸ்க்குள் யாருமில்லையெனினும் கத்துவதை நிறுத்தவில்லை. நெரிசலில் இருந்தவர் சொன்னார்..“ பாவம் பேசண்டைக் கூப்பிடப் போகுது போலிருக்கு.. என்றார்கள்..நெரிசலுக்குக் காரணம் குழி தோண்டிக் கொண்டிருந்த பொக்லைனின் பின் சக்கரங்கள் நல்ல சௌகரியமான ஈரமிக்க குழிகளில் சிக்கிக் கொண்டதும் அதன் பக்கவாட்டு மண்தோண்டி கடவாய்கள் திரும்பி வழியில்லாமையும் காரணம் என்று கண்டுபிடிக்க ஒரு மணிநேரம் ஆனது.

அந்த மங்கை இப்பொழுது இயல்பாகிவிட்டாள். எல்லாரும் விசித்திரமாகப் பார்க்கிறார்கள். நாமும் முத்தமிடலாமாவென யோசிப்பது போலவேத் தெரிகிறது அவனுக்கு உள்பட. கமலி.. நான் கொஞ்சம் இறங்கி நிக்கட்டா என்றாள் அவனோ..பேசாம இரு உனக்கு யாராவது முத்தம் கொடுத்திரப் போறானுக.. என்றான்.
      நெருக்கடி நீண்டு நீண்டு முக்கியமான நெடுஞ்சாலையின் வண்டிகள் தேங்குமளவிற்கு உறுமிக் கொண்டும் காத்துக் கொண்டிருக்கிறது. கூட்டத்தில் ஒரு வயதானவர் “என்னய்யா இத்தன டிராபிக் ஜாம் ஆயிட்டுருக்கு செரைச்சிட்டு இருக்காணுகளா...“ என்கிறார் பதிலுக்கு இளைஞர்கள் சிலர் முத்தங்கொடுத்துட்டு இருக்காங்கன்னு நெனைக்கறன் என்கிறார்கள். அந்த மங்கை இப்பொழுது பொசுக் கென சிரிக்கத் துவங்கியிருக்கிறாள்.
இரவின் பூச்சிகள் பறக்கத்துவங்கியது. அருகிலிருக்கிற மாபெரும் குப்பைக் குடோனிலிருந்து கிளம்பிய ராட்சத கொசுக்களும் ஈக்களும் தலைக்கும் மேல் பறக்கத்துவங் கியது. வாயைத்திறந்து பேசினால் வாய்க்குள் நுழைந்து விடும் போலிருக்கிறது.
பேருந்துகளிலிருந்து சிலர் வாந்தியெடுத்தார்கள். அது வண்டிகளில் காத்திருப்பவர்கள் மீது விழ அவர்கள் பச்சை பச்சையாக அவன் தலைமுறையைத் திட்டத் துவங்கினார்கள். குழந்தைகள் பாலுக்கும் தொழிலாளர்கள் சரக்கு ஞாபகத்திலும் பினாத்த துவங்கினார்கள். ஹாரன்கள் கூட அழத்துவங்கியது. சிலர் நின்ற பேருந்துகளிலிருந்து இறங்கி போக்குவரத்தின் நெரிசலைத் தீர்க்க முனைகிறார்கள்.
அன்னாசிப் பழத்துண்டுகள், மாம்பிஞ்சுகள் கடலை மிட்டாய்கள் விற்பனையாளர்கள் வந்து குவிந்தார்கள். இருள் கவிய ஆரம்பிக்கிறது. தேங்கிவிட்ட நெருக்கடியைத் தீர்க்க முயற்சித்ததின் பலனாக மேலும் படுபயங்கரமான நெருக்கடிகள் வந்து சேர்ந்து போனது. அருகிலிருக்கிற கிராம மக்கள் தங்கள் ஊர்களுக்குள் புகுந்து வந்த வாகனங்கள் வெளியேற முடியாமல் தவிக்கிறது. இதைச் சரிசெய்யச் சொல்லி மறியல் செய்கிறார்களாம்.
       வெறிகொண்ட மக்கள் காத்திருப்பின் எரிச்சலில் தாளமுடியாத வேதனையில் இயற்கை உபாதைகளைக் கழிக்கத் துவங்கினார்கள். சிலர் எரியத் துவங்கியிருந்த மின் விளக்குகளை உடைத்தெறியத்துவங்கினார்கள். சாலையில் கொட்டப்பட்டிருக்கிற கற்கள் கொண்டு சரிமாரியாக உடைக்கத்துவங்கியதும் சிலர் வாகனங்களில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளையும் உடைக்கத்துவங்கினார்கள். மங்கைகள் புணரப்பட்டார்கள் நகைகள் பறிக்கப்பட்டது. எங்கும் அபயக்குரல் அல்லது புணர்ச்சிக் கதறல்கள். வயதான பெண்கள் ஆண்கள் நடக்கிற கொடுமைகளுக்கு எதிராக ஆய் உய் எனக் கத்துகிறார்கள் சிலர் தங்களால் முடிந்த மட்டிலும் தாக்குகிறார்கள்.
         எந்த இடத்தில் எந்தப் பகுதியில் என ஓடிச் செல்ல முடியாதளவிலும் தடைகள். அவன் பதற்றமானான். கமலியை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு அந்த மங்கையைப் பற்றுவதற்கு மனம் உந்தித் தள்ளியது. அருகிலிருந்த அந்த  மங்கையை ஏற்கெனவே சில இளைஞர்கள் சூழந்திருந்தார்கள். அவர்கள் ஏற்கெனவே அறை வாங்கியிருந்தவர்கள். இருளில் நடக்கவேண்டிய சுபகாரியங்கள் நடக்கத் துவங்கி யிருக்கிறது. அவன் உடல் பதறத்துவங்கிய சமயத்தில் கமலியை நான்கைந்து பேர் பற்றியிருந்தார்கள்.
போக்குவரத்து சரியானபோது நகரம் ஆட்டோமேடிக்காக சரியாகியிருக்கிறது. வாகனங்கள் இயல்பில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இருளில் வெளிச்சங்கள் பீய்ச்சியபடி வாகனங்கள் அந்தப் பொதிக்குள் மயங்கிய சில மயங்கி சரிந்து கிடந்த பெண்களின் உடல்கள் மீது ஏறிப் போய்க் கொண்டிருக்கிறது. அந்தப் பொக்லைன் அங்கேயே நின்று கொண்டிருக்கிறது. நெரிசலுக்குரிய வாகனங்கள் இழுத்து சாலை ஓரத்தில் கிடத்தப்பட்டிருக்கிறது. அதற்கருகில் வாகனங்குரிய பெண் உடல்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அவன் வண்டியை மெல்லமாக ஒட்டி வந்தான். வழக்கமாக காய்கறிகள் வாங்குமிடத்தில் நிறுத்தவில்லை. திட்டுத்திட்டாய் காலனியில் விளக்குகள் எறிந்து கொண்டிருக்க அவன் வண்டியை நிறுத்தி வாயில் கேட்டைத்திறந்து உள்ளே நிறுத்தினான். கமலி நடக்க முடியாமல் நடந்து கழிவறையைத்திறந்து குழாயிலிருந்து தண்ணீர் வேகமாக விழும்படி வைத்தாள்.
அவன் வந்தான் இருவரும் ஒரு சேரக் குளித்தார்கள்.. தலை துவட்டினார்கள். எதுவும் பேசவில்லை. விளக்குகள் எறிய விட்டதும் பக்கத்துவீட்டிலிருந்து சில கடிதங்கள் சில பைகள் சில தகவல்கள் வந்தது. நெரிசலில் நிகழ்ந்த சம்பவங்களால் நீங்கள் ஏதாவது மாட்டிக் கொண்டீர்களா..நடந்த செய்திகள் தெரியுமா என்றெல்லாம் அந்த வயதான வீட்டின் உரிமையாளர் பாவம் கலந்த பயத்துடன் கேட்கிறார்.
அவனும் அவளும் நாங்கள் அந்தப் பாதையில் வரவில்லை வேறு வழியில் வந்தோம். அதுமட்டுமின்றி நெரிசலில் நாங்கள் சிக்கவில்லையென்றதும் அவர் அகமகிழந்தார்.
தொலைக்காட்சியில் செய்திகளில் நடந்த சம்பவம் நகர்ந்து கொண்டிருக்க அவன் டிவியை அணைத்தான்.
“சாப்பிடறதுக்கு இப்ப என்ன செய்ய..“ என்றாள்...கமலி












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக