ஞாயிறு, 27 ஜனவரி, 2013

na.peria samy's poetry book "Madhuvahini"

சொற்கள் தீரும் வரை காத்திரு
ந.பெரியசாமியின் மதுவாகினிகவிதை நூலை முன்வைத்து...
       
ஒரு நாள் கிணற்றில் நீச்சலடித்துக் கொண்டிருந்தவர்களை குத்துக்காலிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னாலிருந்து காலால் எத்து விட்டார் மாமா. கையை காலை உதறி மேலேற இவ்வளவு தாண்டா மாப்புள்ள நீச்சல் என்றார். இவ்வளவு எளிதா இதற்கா இவ்வளவு நாள் பயந்து கிடந்தொமென நினைத்த கணத்தில் கிணறு என்னோடு சிநேகிதமாகிவிட நீச்சலில் சில லாவகங்களைக் கற்றறிந்தேன்”- முன்னுரையில் ந.பெரியசாமி.
      அதுபோலவே கவிதையைக் கற்றுக் கொள்ள முடியவில்லை என்பதாகப் பேசும் பெரியசாமி அறிய விளைவது கவிதை நீச்சலை விடவும் நுண் தொழில் அல்ல. மாயத்தின் புகையினை, பின்னணியை நாம் அறிய விழைய முற்படுவதே அபத்தம்தான். கவிதை திரும்பத்திரும்ப எழுதப்படுவதின் ஆக்கமே வாழ்வின் வினோதமான ஏமாற்றங்களும் திருப்பங்களும்தான்.
            ந.பெரியசாமியின் கவிதைகளில் கிணறும் அதன் சுற்றளவு உயிரினங்களும் திரும்பத்திரும்ப வருகிறது. புதிய படிமமாகவும் அனுபவமற்றவர்களின் கிணற்றுக்கும் படித்தவர்களின் போர்வெல்லுமான வித்தியாசம். போர் வெல்லில் இறங்கி நீந்த முடியாது. இழந்த பால்யத்தின் கனவுகள். அல்லது அங்கிருந்து அள்ளிப் பெற்றுக் கொண்டு வந்து அமுதசுரபி உணர்வு நிலைக்குக் கொண்டு செல்கிறது.





நினைவின் புழுதி



நிறைந்த கிணற்றிற்கு
ஒற்றைப் பூச்சூடி
அழகு ததும்பச் செய்து
துளித்தேன் நா பரிமாறி
உடல் தித்தித்து
மணம் படிந்த புழுதியோடு
இணைந்தலைந்த பொழுதுகளை
நினைவுள் பூட்டி
தவித்தலைவாய்
வார்த்தை சாவிகளோடு அலைவுறும்
என்னைப் போலவே---பக் 30
          சங்க காலத்தின் நிலவியல் சூழலுக்கு நம் கற்பனையை விரிக்க வைக்கிறது இக்கவிதை.ஒரு நற்பொழுது விரைந்து முடிந்து போவதும் துயரகாலம் விலகுவதற்கு நெடுநாள் ஆவது போலவுமான பிரமை இருக்கத்தானே செய்கிறது நமக்கும். மட்டுமின்றி மதுவாகினி சித்திரங்களாக கவிதைகளின் ஊடுபாவி கலக்கும் கவிதைகள் அபாரமானவை. பெரியசாமியின் கவிதைகள் என்பதான ஆழ அழுத்தம்


     நாம் ஒரு செயலுக்காக தொடர்பை ஏற்படுத்துவோம். அவர் நம்மிடம் உடனே பட்டியல் ஒன்று தருவார். பட்டியலை முடிப்பதற்காக சிலரிடம் நீங்கள் மேலும் தொடர்பு கொள்வீர்கள் அவர்களும் உங்களுக்கு சில பட்டியல்கள் தருவார் நீங்களும் சளைக்காமல் பட்டியல் பொறுப்புகளை முடிக்க இயங்குவீர்கள். இந்தப்பட்டியல் களால் மிகுந்து சோர்வுற்று நீங்கள் பழைய தொழிலுக்குத் திரும்பிய பிறகுதான் அறிவீர்கள் நீங்கள் பட்டியலில் இருக்கமாட்டீர்கள். பட்டியலைத்தயாரித்தவர்கள் தான் பட்டியலில் வரிசையாக இடம்பெற்றிருப்பார்கள். முந்ததைய நோகாத கவிதைகாலத்திலும் இடம்பெற்ற நிலை தற்கால நவீன கவிதை காலத்திலும் இடம்பெறுகிறது. சினிமா வாரிசுகள் அட்டகாசம் போலவே காலாவதி விமர்சகனின் கவிதை வாரிசுகளின் அட்டகாசம் தொடர்வதை யெல்லாம் ஏதாவது ஒருதருணத்தில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
   
பன்றிகளின் இருப்பைத் தேடும் மதுவாகினி

மதுவாகினிக்கு
பன்றிகள் மீது பரிவு அதிகம்
அவதாரத்தில் இறையடி கண்டதாலல்ல
நோய் பரப்பும் அசிங்க ஜந்தென
முகம் சுளிப்போரை விலக்கி
தேடித்தேடி இருப்பை அடைவாள்
அதுஅதுகள் தன்போக்கில் திரிய
ஏமாற்றத்தில் சோம்பியும்  கிடப்பாள்
என்றாவது தரிசிக்கும் பொழுதில்
தவத்தால் கருத்தரித்தவளாய்
கண்கள் பனித்திருக்கும்
என் இருப்பு குறித்து
எச்சலனமுமின்றி
அனிச்சையாக அவளே
தன் முலை வருடியபடி
விதந்து கொண்டிருப்பாள்
முட்டிய இழுக்கும் குட்டிகளுக்கு
ஒரு சேர பசியடக்கும்
தாய்மையை-பக்-38
கவிதையின் ஆழமான உணர்த்தலும் வாழ்வின் அணுஅணுவான துய்ப்பைப் பன்றிகள் மேற்கொள்வதை மொழியின் எந்த ஆதிக்கமும் இன்றி பதிவாகியிருக்கிறது. நவீன காலத்தின் இருப்பினைப் பேசுகிற ஒவ்வொரு சொல்லும் காத்திரமானதாக இருக்கும்..ந.பெரியசாமி அனுபவத்தால் தோய்ந்தவர். பன்றி மட்டுமல்ல சமூக விலங்குகளின் மூலமாக சுயவிலங்காக மனிதன் மாறி இன்பம் துய்க்க இயற்கை அழித்து முன்னேறுவதற்கு விலங்குகளைத்தான் பயண்படுத்தியிருக்கிறான்.
            ஒரு மணிநேரமே நிற்கும் போதைக்கு நாம் காட்டும் விசுவாசம் தமிழ்மொழிக்கும் நவீன இலக்கியத்திற்கும் என்றென்றும் காட்டவேண்டும். மாயைகளை உருவாக்கும் உலகம் அல்லாத உலகம் ஒன்று கடும் உழைப்பின் வாயிலாச் சுழன்று கொண்டிருக்கிறது என்பதையும் தற்காலத்தின் நவீனப் படைப்பாளர்கள் அறிந்து கொண்டால் தான் மேன் மேலும் முனைப்புடன் எழுதவும் இயங்கவும் முடியும்.
       
        காது அவிஞ்சான் பட்டி எனும் நெடுங்கவிதை நல்ல சித்திரம்.அங்கதம் சிலேடையாக வாசக மனதை குறுஞ்சிறிப் புக்கு இட்டுச்செல்கிறது.அதில் கதாசிரியனுக்குப்பின் கவிதையில் அரசாங்கம் உருவாக்கப்படுகிற பின்னணியை
அந்த அரசு பிற்பாடு யாருக்கெல்லாம் என்னன்ன கொடுப்பினைகளைத் தருகிறது.யாருக்கெல்லாம் நோய்கள் தருகிறது என்பதை விவரிக்கிறார். ஒருசில கவிதைகள் வாசிக்கும் போது நவீனகவிதையின் அலகு நுட்பம் கலை குறித்த மேய்ச்சல் தேடல் கூடாது. அழகியல் சார்ந்த இயற்கையியல் சார்ந்த மன ஒழுங்கின் அவசங்களைப் பேசுகிற கவிதைகளுக்கு கலை பார்க்கலாம். உணவை குப்பை டிராங்க் பெட்டியிலிருந்து நாய்களுடன் எச்சில் இலைகளிலிருந்த உணவு உட்கொள்ளும் மனிதனின் எழுதும் சொல்லும் கவிதையும்தான் நவீன கவிதையின் நுட்பம். மொழி.கட்டுமானம்.கவிதையின் வீரியம். நம் நல்ல காலம் அவன் எழுதுவதில்லை. வாசிப்பதுவுமில்லை. அதனாலெயே இன்பம் துய்க்கிறான் நாம் துன்பம் துய்க்கிறோம்.


        இந்தியக் குடியரசு தினத்தன்று மதுவாகினி தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. நம்முடைய மக்களாட்சியின் மாண்பை வைத்து நடக்கும் டாலர் வியாபாரம் கழுதைகளுக்குப் பொதி ஏற்றுவது போலவே மேலும் மேலும் ஏறும் விலைவாசி. கசாப்புக் கடையின் வாசலில் அடுத்த அறுப்புக்குக் காத்திருக்கும் வெள்ளாட்டைப் போலவும் செப்புக் கம்பி திருடியதற்காக குடியானவர்களால் தந்திக்கம்பத்தில் கட்டிவைத்து உதைக்கப்படுகிறவன் போலவே நம் வாக்காளர்களுக்கு பீலீங் இருக்கிறது. இதெல்லாம் பிரதிகள் வாசிக்கும் போது பேசக்கூடாது. உயர்ஜாதிக் குடியிருப்பு வீதியின் மைதானத்தில் எஸ்பிபி லதா மங்கேஷ்கர் இருவரும் வளையோசை கலகலவென சொக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
          ந.பெரியசாமியின் சில கவிதைகளில் இறுதி வரிகள் மகத்துவம் மிக்க கவிதைகளை சிதைத்திருக்கிறது.
உதாரணமாக..ஆதிக்கத்தில் வழிந்த எச்சில்..நேற்றும் பல்லியானேன். பொதுவாக நாம் கவிதை முடிந்து விடுகிற இடத்தைக் கண்டுபிடித்துக் கொள்கிற ஞானத்தை நாம் கற்றே ஆகவேண்டுமோ எனத்தோன்றுகிறது. அது பெரிய சவாலும் கூட.
         தோத்தான் கோழி, அவள் போட்ட விடுகதை, காலத்தின் நிழல்கள்,மழையின் பசியாறினோம் உள்ளிட்ட சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட வாசக சொர்க்கம் தரும் கவிதைகள். ந.பெரிய சாமியின் கவிதைகள் என்றால் பொருத்தமாக இருக்கும். தொகுப்பில் நிலம்,அவன் குடித்தனம்,அவன் நிராகரிப்பின் சொற்கள், ஒவ்வொரு பதின் பருவத்திலும் அவன் கண்ட நாளின் பொழுதுகள். எல்லாம் அட்சர சுத்தமாக எழுதப்பட்டிருக்கிறது.
         பொதுவாக நம் தேசத்தில் அனுபவசாலிக்கு மரியாதை கிடையாது. முன்காலத்தில் தமிழாசிரியர்க்கு இருந்த மரியாதை இந்தக் காலத்தில் நவீன படைப்பாளிக்கு இருக்கிறது. ந.பெரிய சாமி 80 சதவிகிதம் அழகான சொற்களின் கட்டுமானத் திறமைசாலியாக இருப்பதுதான் அவருடைய பலவீனம் என்று கருதுகிறேன்.
அவர் தன்னுடைய பட்டறிவுத்திறனை திறமையை 30 சதவிகிதமாகக் குறைக்கும் பட்சத்தில் நவீன தமிழ்க்கவிதையின் ஆகச் சிறந்த இடத்தை அடைய வாய்ப்பிருக்கிறது. அப்படியில்லையெனில் விமர்சகனாவது 30 சதவிகித திறமையை வளர்க்க வேண்டும். இதில் யார் முன் செல்கிறார்கள் என்பதுதான் தற்போதைய கவிஞன் விமர்சகன் இருவருக்குள் நடக்கும் பதினஞ்சாங்கரம்
        தமிழ் தேசத்தில் ஏற்றிய திறமையைக் குறைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதும் சிரமம்தான். முடிந்த வரை தம்மைத்தாமே மழுங்கடித்துக் கொள்வதை வேண்டுமானால் செய்து கொள்ளலாம்.
       கவிதைகளும் கவிஞர்களும் இல்லையென்றால் நிச்சயமாக கொஞ்சம் முற்போக்கு இளைஞர்கள் அந்தமான் சிறைகளுக்கும் குண்டனாமொ சிறைக்கும் அனுப்பப்பட்டி ருப்பார்கள். நல்லவேளை ராசாங்க விசுவாசிகளுக்கும் ஜனரஞ்சக வாசகர்களுக்கும் கவிதைகள் புரியாததால் நாம் கவிதைகளுடன் வாழ நேர்ந்து வருவதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
        கவிதைதான் கொஞ்சம் பொறுமிக்க அறிவைக் கற்றுத்தருகிறது. கவிதைகளில் பறக்கும் பறவை கவிஞனல்ல வாசகன். கவிதைகளில் இருக்கும் மரநிழல் கவினுடையதல்ல வாசகனுடையது. வாசகனுக்கும் அதாவது கவிதைகளை வாசிக்கிற பருவத்தில் இருப்பவர் எல்லோரும் வாசகர்கள் தான். கவிஞனுக்குமான உறவை பட்டை தீட்டப்பட்ட சொற்கள் மேலும் வலுப்படுத்துகிறது.
தன் கவிதையை தானே சுமந்து கொண்டும் அதுபோலவே தன் எழுத்தை தானே கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய காலமும் கூட. நெசவாளி.விவசாயி.கீரைக்காரன்,தக்காளிப் பழம்.கறிவேப்பிலை எந்தப் பொருளானாலும் அவனே தெருவிற்குள் கூவிக் கொண்டு நுழைவதைப் போலவும் வருங்காலத்தில் படைப்பாளியும் நுண்அரசியல் புலத்தில் மாநகரத்தின் வீதிகளில் கூவி விற்கவேண்டிய நிலையும் வரலாம். வந்தால் அதையும் அழகுற நடத்திக்காட்டுவான்
நவீன படைப்பாளி. வழுக்கி வழுக்கிப் போகும் அனுபவச் சொற்களைப் பற்றிக் கைக்கொள்தல் கடினம்.
       இறுகி மடித்துத் திருகி ஒழுங்குக் கூர் முனைகளற்று
மாயப்புரிதலுமற்று புகையினுள் அந்தரத்தில் ஒளித்து வைக்கப்படும் அனுபவமற்ற நகல் பாதிப்புக் கவிதைகளிலிருந்து பெரியசாமி விலகியிருப்பது முக்கியம்.
படிப்பு.கல்லூரி,மேல்படிப்பு, ஆய்வுப் பட்டப்படிப்பு, ஆய்வுப் பட்ட மேல் ஆய்வுப் படிப்பு, முனைவர்.முதுமுனைவர். ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்.தேர்வாணையக் குழு உறுப்பினர். பாடத்திட்டக்குழு உறுப்பினர். என்றெல்லாம் மேலே மேலே உயர்கிற நிலையை தமிழ்ப்பெருங்குடிக்குக் கிடைப்பது  எதற்காகவென்றால் கொஞ்சம் நவீன இலக்கியத்திற்கும் கொஞ்சம் கருணைகாட்ட வே்ணடம் என்பதற்காகத் தான் நவீன இலக்கியமா அப்படியென்றால் என்ன கேட்கிறவர்கள்தான் பீடங்களில் உட்கார்ந்து கொண்டு
மூளைக்கு நோகாத குண்டிக்கும் நோகாத சொற்கள் நீவி
நிதியை வெட்டிக் கடைமடைக்குத் திருப்பிக்கொள்கிறார்கள்.
          இலவசமாகக் கொடுத்தாலும் வாசிக்கும் அறிவில்லாத மெத்தப்படித்தவர்கள் பட்டியிலி்ல் இருக்கும் லட்சக்கணக்கான வாசகர்களுக்கு அறிவு புகட்டும் பணியையும் கூட எழுதி வெளியிட்டு கடைகளுக்குக் கொண்டு போய்ச்சேர்த்து பிறகு வாசிக்கும் அறிவையும் புகட்ட வேண்டிய கட்டாயத்திற்கு நவீன படைப்பாளி வாழ்வும் காலமும் நேர்ந்திருக்கிறது என்று சொன்னால் இதை உருவாக்கியவர்கள் யார். அல்லது அந்த நிலைமை யை மாற்ற என்ன முயற்சிகள் எடுக்கப்படுகிறது அப்படியான முயற்சிகளை யார் செய்கிறார்கள். அப்படி செய்கிறவர்களை நாம் ஊக்குவித்திருக்கிறோமா என்றெல்லாம் இந்தத் தருணத்தில் யோசிக்க வேண்டியிருக்கிறது. அனுபவமும் படிப்பினையும் படிப்பும் அறிவும் பழுத்த சொற்களும் இணைய வேண்டும்.
         நவீன காலத்தின் எழுத்து வடிவம் திரும்பவும் இருபது ஆண்டுகளுக்குப் பின்பாகத் திருப்பிக்கொண்டு போவதற்கு சில மூத்த காலாவதியாகிப் போன சொல்லாடிகள் முயற்சி செய்கிறார்கள். மிகபிரமாண்டமாய் வளர்ந்து கொண்டிருக்கும் கார்ப்பரெட் சமூகத்திற்குச் சரிசமமாக இயங்குவதற்கு நம்முடைய நவீன இலக்கிய வாதிகள் முயலாமல் பேடிகளாகவும் இருளைக் கண்டாலே ஒண்ணுக்குப் போகிறவர்களாகவும் மாறிக் கொண்டிருக் கிறார்கள். அவர்களும் மேல்தட்டு வர்க்கத்தின் உடல் பயிற்சிகள் உணவுப் பழக்க முறைகள் வாகன வசதிகள் எல்லாமே அவர்களைப் பார்த்துப்பின் பற்றுகிறார்கள். வீட்டுக்குள்ளே ஆய் போவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் நவீன படைப்பாளிகள்.
         வாசகனாக வாழ்வில் இளைப்பாறிக் கொள்தல் என்பதும் நமக்குக் கிடைக்கிற வரப்பிரசாதம் அல்லது கொடை எனலாம்.
       இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய வாக்காளர் தினத்திற்கான உறுதி மொழியை அலுவலகத்தில் எடுத்துக் கொண்டேன்.
          இதுபோலவே கவிதைக்கான தேசிய தினமொன்று உருவாக்கி உறுதி மொழியும் கவிதை மக்களுக்கான ஜனநாயக பிரதி என்பதை உறுதிப்படுத்தும் விதமாக மைக்செட் வைத்து மிட்டாய் கொடுத்துக் கொண்டாடினால் எப்படியிருக்கும்.யோசிப்பதற்கே அழகாக இருக்கிறது. பிரமிப்பாக இருக்கிறது. கவிஞனின் சொற்கள் அத்தனை சுகம் தருபவை. ந.பெரியசாமியின் பீடத்திற்கு அருகில் சில நேர்த்திக்கடன் மண் உருவாரங்களை வைத்து நம் நோய் நொடிகளைத் தீர்க்க நாம் முற்படலாம். தவறில்லை. முதலில் நான் மண்  நாய்க்குட்டி மற்றும் பாம்பு பொம்மை பாத அடிகள் பொம்மை சிறு மரத்தொட்டில் ஆகியவற்றை வைத்து வழிபடுகிறேன்..

வெளியீடு-
ந.பெரியசாமி
94876 46819
Na.periasamy@gmail.com
பக்-80
வி்லை-80
அகநாழிகை பதிப்பகம்
33 மண்டபம் வீதி
மதுராந்தகம் -603306
            





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக